தாய்லாந்தில் தனது தொலைபேசி அழைப்புகளை ஏற்காமல், தன்னையும், மகனையும் அலட்சியம் செய்யும் கணவரை தண்டிப்பதற்காக, பெண் ஒருவர் ஒரு வயது மகனின் கழுத்தை கயிற்றால் இறுக்கி, அதனை வீடியோவாக எடுத்து கணவருக்கு அனுப்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தாய்லாந்தை சேர்ந்த பெண் (வயது 28) ஒருவர், தன்னையும், மகனையும் கண்டுகொள்ளாமல், அவரது அழைப்புகளை ஏற்காமல் அலட்சியம் செய்யும் கணவரை காயப்படுத்துவதற்காக, தன் ஒரு வயது மகனின் கழுத்தை கயிற்றால் இறுக்கி அதனை வீடியோவாக எடுக்கிறார்.
அதில், அவர் பேசும்போது, “ஜோ, நீங்கள் மற்றவர்கள் குறித்து நிறைய அக்கறை கொள்கிறீர்கள். இது உங்கள் மகன். இது கயிறு. நீங்கள் இங்கு வந்து அவனை அழைத்துச் செல்லவில்லை என்றால், நான் என்ன செய்வேன் என்பதை நீங்கள் பொறுத்திருந்து பார்க்க வேண்டும். நீங்கள் என்னுடைய தொலைபேசி அழைப்புகளை ஏற்பதில்லை.”, என கூறினார்.
அதன்பின், அந்த குழந்தை கதறிஅழுதாலும், அதனை விடாமல் கழுத்தில் கயிறை இறுக்குகிறார்.
இந்த வீடியோவை அப்பெண் தன் கணவருக்கு அனுப்புகிறார். அவருடைய கணவர், அந்த வீடியோவை தன் தாய் மற்றும் சகோதரிக்கு அனுப்புகிறார். அதன்பின் அவர்கள், வீடியோவை இணையத்தில் பதிவிட்டு காவல் துறையினர் உதவியை நாடினர். அதன்பின்பு, காவல் துறையினர் அங்கு சென்று குழந்தையை மீட்டனர்.
குழந்தைக்கு எவ்வித காயமும் இல்லை எனவும், இருப்பினும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து அப்பெண் காவல் துறை விசாரணையில் கூறியதாவது, “நான் மிகவும் காயப்பட்டுள்ளேன். முதலில் நான் தான் தற்கொலை செய்துகொள்ள வேண்டும் என நினைத்தேன். இதனை நான் யோசிக்காமல் செய்துவிட்டேன். நான் அப்போது உணர்ச்சிவசப்பட்டு விட்டேன். என் கணவர் குழந்தை குறித்து அக்கறை கொள்ளாமல் இருக்கிறார். என் குழந்தையின் மூலம் நான் என் கணவரை காயப்படுத்த வேண்டும் என நினைத்தேன். அதனால், அதனை வீடியோவாக எடுத்து அவருக்கு அனுப்பினேன்.”, என கூறினார்.
குடும்பத்தில் நிலவும் கருத்து வேறுபாட்டால் இச்சம்பவம் நடைபெற்றது எனக்கூறி இதுகுறித்து அப்பெண்ணின் கணவர் புகார் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.