மயிலுக்கு போர்வை தந்த பேகன், புறாவுக்காக தன் தசையை கொடுத்த சிபிச் சக்ரவர்த்தி என்று நாம் இலக்கியத்திலும் கதைகளிலும் படித்திருப்போம். அதுபோல, இப்போதும் நவீன பேகன்கள் இருக்கிறார்கள் என்பதைக் காட்டும் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
புவியில் எல்லா உயிர்களும் ஒன்றை ஒன்று சார்ந்தே வாழ்கின்றன. பொதுவாக விலங்குகள், பறவைகள் துன்பத்தில் சிக்கிக்கொள்ளும்போது அவற்றுக்கு மனிதர்கள் உதவி செய்யும்போது அவர்களை அனைவரும் பாராட்டவே செய்கின்றனர். இலக்கியங்களிலும், புராணங்களிலும், கதைகளிலும் விலங்குகள் பறவைகளை நேசிக்கும் பாத்திரங்கள் நிறைய உள்ளன.
Duck counts & makes sure that all the ducklings are rescued.
And the hero’s in uniform were equal to the task???? pic.twitter.com/caurp8CVjz
— Susanta Nanda IFS (@susantananda3) April 16, 2020
அப்படி, மயிலுக்கு போர்வை தந்த பேகன், புறாவுக்காக தனது தசையைக் கொடுத்த சிபி சக்ரவர்த்தி என்று கதைகளைப் படித்திருப்போம். அந்த கதாபாத்திரங்களைப் போல, நிகழ்காலத்திலும் விலங்குகளையும் பறவைகளையும் நேசிப்பவர்கள் இருக்கத்தான் செய்கின்றனர்.
சாலையில் ஒரு வாத்து கத்தி தவித்துக்கொண்டிருந்ததைப் பார்த்த காவலர்கள் ஏன் இப்படி வாத்து கத்துகிறது என நின்று கவனித்தபோது சாலையோர் மழை நீர் செல்ல அமைக்கப்பட்டுள்ள கால்வாயில் மேலே அமைக்கப்பட்டுள்ள கம்பி வளையின் வழியாக சில வாத்து குஞ்சுகள் உள்ளே விழுந்துவிட்டிருப்பதைப் பார்த்தனர். கடினமாக இருந்த அந்த கம்பி வளையை மிகவும் போராடி அகற்றிய பின், ஒவ்வொன்றாக வாத்துக் குஞ்சுகளை மீட்டு தாய் வாத்திடம் ஒப்படைத்தனர். அனைத்து வாத்து குஞ்சுகளும் சரியாக இருக்கிறதா என்று உறுதிப்படுதிக்கொண்ட அந்த தாய் வாத்து அந்த காவலர்களை நன்றியுடன் பார்த்தது பலரையும் நெகிழச் செய்துள்ளது.
வாத்து குஞ்சுகளை மீட்டு தாய் வாத்திடம் ஒப்படைத்த காவலர்கள், போக்குவரத்து நெரிசல் மிக்க அந்த சாலையில அவற்றை அப்படியே அங்கேயே விட்டுவிடாமல், அந்த தாய் வாத்தையும் அதன் குஞ்சுகளையும் ஒரு பையில் எடுத்துச் சென்று ஒரு நீர் நிலையில் விட்டனர். இந்த சம்பவம் வீடியோவாக பதிவு செய்யப்பட்டு சமூக ஊடகங்களில் பகிர வைரலானது.
இந்த வீடியோவை வனத்துறை அதிகாரி சுசந்தா நந்தா, அனைத்து வாத்து குஞ்சுகளையும் மீட்கப்பட்டதை தாய் வாத்து எண்ணி உறுதிப்படுத்திக்கொண்டது. சீருடையில் உள்ள இந்த ஹிரோக்களின் செயல் மீட்பு பணிக்கு இணையானது என்று குறிப்பிட்டு தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் இதுதான் மனிதநேயத்துக்கு இலக்கணம் என்று பாராட்டி வருகின்றனர்.
காவலர்கள் வாத்து குஞ்சுகளை மீட்டது எந்த நாட்டில் நடந்த நிகழ்வு என்று குறிப்பிடப் படாவிட்டாலும் இன்றைய காலத்திலும் வாத்து குஞ்சுகளைக் காப்பாற்றி தாய் வாத்தின் துயரைப் போக்கும் நவீன பேகன்கள் இருக்கிறார்கள் என்பதை இந்த வீடியோ காட்டுகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.