வரும் செவ்வாய் கிழமை 70-வது சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ளது. அதை முன்னிட்டு, இந்திய அரசு தேசிய கீதத்தின் வீடியோ ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. அதில், இந்திய திரையுலகத்தின் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், பல சிறப்பு குழந்தைகளுடன் தேசிய கீதத்தை சைகை மொழியால் பாடுகிறார்.
எல்லோரையும் ஒருங்கிணைந்த மற்றும் வேற்றுமையில் ஒற்றுமையை உணர்த்தும் வகையில் அந்த வீடியோ உள்ளது.
தேசிய கீதத்தின் வீடியோ காட்சியின் பின்புறம் செங்கோட்டை உள்ளது. அதன் பின்பு, சிறப்பு குழந்தைகள், அமிதாப் பச்சனுடன் இணைந்து தேசிய கீதத்தைப் பாடுகின்றனர்.
இந்த தேசிய கீதத்திற்கு பின்னணி இசையமைத்தவர் மறைந்த இசையமைப்பாளர் ஆதேஷ் ஸ்ரீவத்சவா. இந்த காரணத்தினாலும் இந்த பாடல் முக்கியத்துவம் பெறுகிறது. பாடல் காட்சியை இயக்கியவர் மூத்த இயக்குநர் கோவிந்த நிஹ்லானி. பாடல் காட்சியின் கருவை உருவாக்கியவர் ‘வீ கேர் ஃபிலிம் ஃபெஸ்டிவல்’ அமைப்பின் நிறுவனர் மற்றும் இயக்குநரான சதீஷ் கபூர்.
இந்த வீடியோ மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தால் வெளியிடப்பட்டது. சமூக இணையத்தளங்களில் பெரும் வரவேற்பை இந்த வீடியோ பெற்றுள்ளது. இதுகுறித்து மத்திய
மனிதவள மேம்பாட்டு இணையமைச்சர் மஹேந்திர நாத் பாண்டே கூறுகையில், “வாழ்க்கையை எளிதாக்கத் தான் இந்த வீடியோ உருவாக்கப்பட்டுள்ளது. சைகை மொழி என்பது பண்டைய காலத்திலிருந்தே வழங்கப்பட்டு வந்த முறை”, என கூறினார்.
குழந்தைகளுடன் அமிதாப் சைகை மொழியால் பாடிய தேசிய கீத வீடியோவை நீங்களும் பாருங்கள். கட்டாயம் மெய் சிலிர்த்து விடும்.