/indian-express-tamil/media/media_files/2025/10/15/moong-dal-2025-10-15-13-27-27.jpg)
தீபாவளி பண்டிகை முடிந்துவிட்டால், வீட்டிலே சுட்ட முறுக்கு, அதிரசம் போன்ற பலகாரங்களைச் செய்த மீதமுள்ள எண்ணெய் என்ன செய்வது என்ற குழப்பம் அனைவருக்கும் இருக்கும். மீதமுள்ள எண்ணெயை மீண்டும் மீண்டும் பயன்படுத்துவது உடல் நலத்திற்கு நல்லதல்ல. இந்தச் சமயத்தில், நீங்கள் மீதமுள்ள நல்லெண்ணெயைப் பயன்படுத்தி ஒரு மாதம் வரை கெட்டுப்போகாத, மிக மிக சுவையான ஒரு நொறுக்குத் தீனியைத் தயாரித்து உங்கள் கவலையைப் போக்கலாம்.
அதுதான், இந்த மொறுமொறுப்பான கடலைப்பருப்பு ஸ்நாக்ஸ். குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த இந்த எளிய பலகாரம், மிகக் குறைந்த நேரத்தில் தயார் செய்யக்கூடியது. இந்த ரெசிபிக்கு நீங்கள் செய்ய வேண்டிய ஒரே வேலை கடலைப்பருப்பை இரவு முழுவதும் ஊறவைப்பது மட்டும்தான். இதனை எப்படி செய்வது என்று ஆர்.கே.ரெசிபிஸ் பவுல் இன்ஸ்டா பக்கத்தில் செய்து காட்டியிருப்பது பற்றி பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
கடலைப்பருப்பு 1 கப்
பூண்டுப் பற்கள் 4 (தட்டி வைக்கவும்)
கறிவேப்பிலை 2 கொத்து
உப்பு
தனி மிளகாய்தூள் 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் 1/2 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் 1/2 டீஸ்பூன்
எண்ணெய்
செய்முறை:
முதலில் கடலைப்பருப்பை எடுத்து, குறைந்தபட்சம் 8 முதல் 10 மணி நேரம் வரை அல்லது இரவு முழுவதும் நன்கு ஊற வைக்கவும். இந்த அளவு ஊறினால் மட்டுமே கடலைப்பருப்பு நன்கு மொறுமொறுப்பாக இருக்கும். பருப்பு நன்கு ஊறிய பிறகு, அதில் உள்ள தண்ணீரை முழுவதுமாக வடித்துவிட வேண்டும். பின்னர், ஒரு சுத்தமான துணியில் பரத்தி, ஃபேன் காற்றில் சுமார் அரை மணி நேரம் காய வைக்கவும். பருப்பில் சிறிதளவு கூட ஈரம் இருக்கக்கூடாது.
அடுப்பை மிதமான (மீடியம்) தீயில் வைத்து, பலகாரம் சுட்ட மீதமுள்ள எண்ணெயைச் சூடாக்கவும். இதில் உலர்த்திய கடலைப்பருப்பை கொஞ்சம் கொஞ்சமாகப் பிரித்துப் போட்டு பொரித்தெடுக்கவும். பருப்பு நன்றாக வெந்து, பொன்னிறமாக மாறும்போது (எண்ணெயில் சிவக்க விடாமல்) உடனே எடுத்துவிடவும். பருப்பு வெந்து மேலே வர ஆரம்பிக்கும்போதே அதை எடுத்துவிடலாம். அதே எண்ணெயில் தட்டி வைத்திருக்கும் 4 பூண்டுப் பற்களையும், 2 கொத்து கறிவேப்பிலையையும் போட்டு பொன்னிறமாகப் பொரித்து எடுத்து தனியே வைத்துக் கொள்ளவும்.
பொரித்த கடலைப்பருப்பு சூடாக இருக்கும்போதே, அதில் தேவையான அளவு உப்பு, ஒரு டீஸ்பூன் தனி மிளகாய்தூள், அரை டீஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் அரை டீஸ்பூன் பெருங்காயத்தூள் ஆகியவற்றைச் சேர்க்கவும். அத்துடன் பொரித்து வைத்த பூண்டு மற்றும் கறிவேப்பிலையையும் சேர்த்து நன்கு குலுக்கி அல்லது கரண்டியால் கிளறவும். இந்தச் சுவையான பலகாரத்தை முழுவதுமாக ஆற வைத்த பிறகு, காற்றுப் புகாத ஒரு கண்ணாடி பாட்டில் அல்லது டப்பாவில் போட்டு வைத்தால், ஒரு மாதம் ஆனாலும் இதன் மொறுமொறுப்பு மாறாமல் அப்படியே இருக்கும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.