10 tips for avoiding business loan scams : இணைய சேவை அதிகரிக்க துவங்கிய நாட்களில் இருந்து இணைய சேவையையும் மக்களிடம் நிதி சார்பாக இருக்கும் குறைவான விழிப்புணர்வை பயன்படுத்தியும் நிறைய மோசடிகள் அரங்கேறி வருகிறது. இப்படியான மோசடி செய்ய நினைக்கும் கும்பலின் பிரதான இலக்காக அமைந்திருப்பது சிறு குறு தொழில் முனைவோர்கள் தான். ஏன் என்றால் அவர்கள் தொடர்ந்து தொழிலை நடத்த தேவையான கடனை பெறுவதில் நிறைய நடைமுறை சிக்கல்கள் இருப்பது தான்.
கிரெடிட் ரிப்பேர் மோசடி, முன்பணம் வாங்கிக் கொண்டு மோசடி, கலந்தாய்வு நடத்தலாம் என்ற பெயரில் மோசடி என்று பலவகையான யுத்திகளை கையாண்டு மோசடிகளில் கும்பல்கள் ஈடுபடுவது உண்டு. இத்தகைய மோசடிகளில் இருந்து நீங்கள் தப்பிக்க விரும்பினால் இந்த 5 முக்கிய குறிப்புகள் உங்களுக்கு கட்டாயம் உதவும்.
நம்பத்தகுந்த கடன் தரும் நிறுவனங்களிடம் செல்லுங்கள்
தொடர்ந்து பலமுறை வங்கிகளில் விண்ணப்பம் செய்து லோன் கிடைக்காமல் போகும் பட்சத்தில் ஏற்படும் விரக்தி பொதுவானது தான். அதனால் யார் உதவ முன்வருகின்றோம் என்று கூறுகின்றார்களோ அவர்களை நம்புவதும் இயல்பு தான். ஆனால் அப்படி கடன்களை பெறுவதற்கு முன்பு அவர்கள் நம்பிக்கைக்கு உரியவர்களா என்பதை முதலில் ஆய்வு செய்யுங்கள். கடன் வழங்கும் அந்த நபர் அல்லது அந்த நிறுவனம் குறித்து ஆன்லைன் மற்றும் ஆஃப்லைனில் சோதனை செய்யுங்கள்.
லோன் செயலி
சமீபத்தில் போலியாக பே.டி.எம். செயலி உருவாக்கப்பட்ட நூதனக் கொள்ளையே நடந்தது. அதனால் நீங்கள் ஏதேனும் ஆப் மூலம் லோன் பெற முயறி செய்கிறீர்கள் என்றால் அந்த வங்கி செயலி ஆர்.பி.ஐயின் கட்டுப்பாட்டில் இருக்கிறதா என்பதை ஆய்வு செய்யுங்கள். செயலியில் குறிப்பிடப்பட்டிருக்கும் அனைத்து நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகளை படியுங்கள்
அலுவலகம் அல்லது கிளைகளுக்கு நேரில் செல்லுங்கள்
உங்களுக்கு லோன் தருகின்றோம் என்று கூறும் நபர்கள் அல்லது நிறுவனங்களின் முகவரியை கண்டுபிடியுங்கள். உண்மையில் அந்த நிறுவனம் சட்டப்பூர்வமாக அங்கீகாரம் பெற்று செயல்படுகிறதா என்று பாருங்கள். மேலும் ஆன்லைனில் இந்த நிறுவனங்கள் குறித்த ரிவ்யூவை படித்து பாருங்கள்
தேவையற்ற, பரீட்சையமற்ற அழைப்புகள், இணைப்புகள்
உங்களுக்கு லோன் தருகின்றோம் என்று வங்கிசாரா அமைப்புகளில் இருந்து தேவையற்ற அழைப்புகள் வரும் பட்சத்தில் உடனே அதனை துண்டிப்பது நல்லது. சிறப்பான சலுகைகளை வழங்குகிறோம். குறைவான வட்டி கிடைக்கும் என்றெல்லாம் அவர்கள் கூறும் வார்த்தைகளை நம்ப வேண்டாம். அதே போன்று வங்கி சேவை தொடர்பாக நூறுக்கும் மேற்பட்ட மின்னஞ்சல் செய்திகளும் இணைப்புகளும் உங்கள் மெயிலுக்கு வரும். நம்பகத் தன்மை அற்ற இணைப்புகளை க்ளிக் செய்வதை தவிர்ப்பது நல்லது.
வல்லுநர்களின் ஆலோசனைகளை கேளுங்கள்
எப்போதும் சட்டப்பூர்வமாக செயல்படும் நிதி நிறுவனங்கள் உங்களின் லோன் விண்ணப்பம் உறுதி செய்யப்படுவதற்கு முன்பு எக்காரணம் கொண்டும் பணம் கேட்கமாட்டார்கள். விண்ணப்பம் அனுப்பப்பட்டவுடன் லோனுக்கான கட்டணத்தையும் அவர்கள் கேட்கமாட்டார்கள். ஏன் என்றால் லோன் விண்ணப்பம் சரிபார்க்கப்பட்டு அதற்கு ஒப்புதல் கிடைக்க காலம் ஆகும். எனவே லோன் வாங்க விரும்பினால் நீங்கள் முதலில் நிதி சார் ஆலோசனைகளை வல்லுநர்களிடம் பெறுவது தான் நல்லது. அவர்கள் உங்களுக்கு சிறந்த வழிகாட்டியாக செயல்படுவார்கள்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil