Adani Group planning to enter telecom spectrum race Tamil News: ஜூலை 26 அன்று அதிவேக இணைய இணைப்பான 5G அலைக்கறைக்கான ஏலத்தில், அதானியும் கலந்து கொண்டால் அது அம்பானியுடன் மோதும் நேரடி போட்டியாக இருக்கும்.
5G Spectrum auction Tamil News: தொலைத்தொடர்பு வரலாற்றில் மிகப் பெரிய புரட்சியாக பார்க்கப்படுவது 5ஜி சேவையாகும். இந்த அதிவேக இணைய இணைப்பு (5G) தொலைத்தொடர்பு சேவைகளை வழங்கும் நிறுவனங்களுக்கான ஏலம் வருகிற 26-ம் தேதி நடைபெறுகிறது. இதில் முகேஷ் அம்பானியின் ஜியோ, மிட்டலின் ஏர்டெல் உள்ளிட்ட நிறுவனங்கள் போட்டியிடும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், திடீர் திருப்பமாக தற்போது கவுதம் அதானியும் இந்த 5ஜி ஏலத்தில் களமிறங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
Advertisment
நேருக்கு நேர் மோதும் இந்தியாவின் பெரும் பணக்காரர்கள்
அதானி குழுமத் தலைவர் கவுதம் அதானி மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் முகேஷ் அம்பானி உலக பணக்காரர்களில் பட்டியலில் டாப் 10 இடங்களில் இருந்து வருகிறார்கள். ஆசிய கண்டத்தின் நம்பர் 1 பணக்காரர் என்ற அந்தஸ்தை பிடிப்பதில் இருவருக்கு இடையிலும் கடுமையான போட்டி நிலவி வருகிறது.
தற்போது ஆசியவின் நம்பர் 1 பணக்காரராக முகேஷ் அம்பானி இருந்து வருகிறார். அவரது சொத்து மதிப்பு 99.7 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என்றும், 98.7 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மொத்த சொத்து மதிப்புடன் அதானி 2ம் இடத்தில் உள்ளார் என்றும் "ப்ளூம்பெர்க் ரியல் டைம் பில்லியனர்" -இன் அறிக்கை தெரிவிக்கிறது. குஜராத் மாநிலத்தை சேர்ந்த இவ்விரு பெரும் பணக்காரர்களும் பல துறைகளில் கால்பதித்து வருகின்றனர்.
சமீப காலம் வரை இருவரும் நேருக்கு நேர் மோதவில்லை என்றாலும், அதானி எண்ணெய் மற்றும் பெட்ரோ கெமிக்கல்ஸ் வணிகத்திலிருந்து தொலைத்தொடர்பு மற்றும் சில்லறை வணிகத்திற்கு தனது வியாபாரத்தை விரிவடைய செய்து வருகிறார். மேலும், துறைமுகங்கள் பிரிவில் இருந்து நிலக்கரி, எரிசக்தி விநியோகம் மற்றும் விமானப் போக்குவரத்துக்கு என பன்முகப்படுத்தியும் வருகிறார். இந்த துறைகளில் முகேஷ் அம்பானியின் தந்தை திருபாய் அம்பானி காலத்தில் இருந்தே அவர்கள் குடும்பம் கோலோச்சி வரும் துறையாகும்.
2030 ஆம் ஆண்டுக்குள் உலகின் மிகப்பெரிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியாளராக இருக்கும் திட்டங்களை அதானி வெளியிட்டார். இதனைத் தொடர்ந்து சோலார் பேனல்கள், பேட்டரிகள், பச்சை ஹைட்ரஜன் மற்றும் எரிபொருள் செல்களுக்கான ஜிகா தொழிற்சாலைகள் உட்பட புதிய ஆற்றல் வணிகத்திற்கான பல பில்லியன் டாலர் திட்டங்களை அம்பானியும் அறிவித்துள்ளார்.
இந்நிலையில், ஜூலை 26 அன்று அதிவேக இணைய இணைப்பான 5G அலைக்கறைக்கான ஏலத்தில், அதானியும் கலந்து கொண்டால் அது அம்பானியுடன் மோதும் நேரடி போட்டியாக இருக்கும்.
ஏல விதிமுறைகள் என்ன?
இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) பரிந்துரைத்த ரிசர்வ் விலையில் 5ஜி அலைக்கறைக்கான ஏலத்துக்கு கடந்த மாதம் அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. மொபைல் சேவைகளுக்கான 5ஜி அலைக்கற்றை விற்பனைக்கான தரை விலையில் சுமார் 39 சதவீதம் குறைப்புக்கு ஒழுங்குமுறை ஆணையம் பரிந்துரைத்திருந்தது.
அதன்படி வரும் 26-ம் தேதி ஏலம் நடைபெற இருக்கிறது. இதில் 20 ஆண்டுகளுக்கு 73 ஜிகாஹெட்ஸ் அலைக்கறை ஏலம் விடப்படுகிறது. ஜியோ, ஏர்டெல், வோடஃபோன் ஐடியா ஆகிய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இந்த ஏலத்தில் பங்கேற்க உள்ளன.
ஒட்டுமொத்தமாக, வரவிருக்கும் ஏலத்தில் ஏலதாரர்களுக்கான கட்டண விதிமுறைகள் தளர்த்தப்பட்டுள்ளன.
முதன்முறையாக, வெற்றிகரமான ஏலதாரர்கள் முன்பணம் செலுத்த வேண்டிய கட்டாயம் இல்லை.
5ஜி அலைக்கறைக்கான கட்டணங்களை 20 சம வருடாந்திர தவணைகளில் செலுத்தலாம். ஒவ்வொரு ஆண்டும் தொடக்கத்தில் முன்கூட்டியே செலுத்த வேண்டும். இது பணப்புழக்கத் தேவைகளை கணிசமாக எளிதாக்கும் மற்றும் இந்தத் துறையில் வணிகம் செய்வதற்கான செலவைக் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏலதாரர்களுக்கு 10 ஆண்டுகளுக்குப் பிறகு 5ஜி அலைக்கறையை திருப்பி அரசிடம் ஒப்படைக்க விருப்பம் வழங்கப்படும். இந்த ஏலத்தில் பெறப்பட்ட அலைக்கற்றைக்கு SUC (ஸ்பெக்ட்ரம் பயன்பாட்டுக் கட்டணம்) விதிக்கப்படாது.
ஒன்பது அதிர்வெண் அலைவரிசைகளில் உள்ள 5G ஸ்பெக்ட்ரம் தொலைத்தொடர்பு ஆபரேட்டர்களுக்கு ஏலம் விடப்படும் போது, விண்ணப்பங்களை அழைக்கும் அறிவிப்பு வெளியிப்படும். டெலிகாம் துறையால் வழங்கப்பட்ட ஏலம் தொடர்பான ஆவணம் மற்றும் தொலைத்தொடர்பு நிறுவனங்களிடம் இருந்து 5G ஸ்பெக்ட்ரத்தை தங்கள் கேப்டிவ் அல்லாத பொது நெட்வொர்க்கிற்கு குத்தகைக்கு எடுக்க தொழில்நுட்ப நிறுவனங்கள் அனுமதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.