சென்னையில் உள்ள ஃபாக்ஸ்கான் நிறுவனத்தைச் சேர்ந்த கிளவுட் நெட்வொர்க் டெக்னாலஜி என்ற உற்பத்தியாளருடனான ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்த ஆண்டின் பிற்பகுதியில் ஃபயர் டிவி ஸ்டிக் கருவிகள் உற்பத்தியை அமேசான் நிறுவனம் துவக்குகிறது.
அமேசான் நிறுவனத்தின் முதல் மின்னணு சார்ந்த பொருட்களின் தயாரிப்பு ஒவ்வொரு ஆண்டும் நூறாயிரக்கணக்கான ஃபயர் டிவி ஸ்டிக் கருவிகளை உற்பத்தி செய்யும். இந்திய வாடிக்கையாளர்களின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் இந்த தயாரிப்பு அமையும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்தது.
"உள்நாட்டுத் தேவைகளைக் கருத்தில் கொண்டு கூடுதலான சந்தைப் பகுதிகள்/ நகரங்களில் செயல் திறனை அதிகரிப்பதற்கான மதிப்பிடுதலை அமேசான் தொடர்ந்து மேற்கொள்ளும் என்று அமேசான் நிறுவனத்தின் சர்வதேச மூத்த துணைத் தலைவரும் இந்தியாவிற்கான தலைவருமான அமித் அகர்வால் தெரிவித்தார்.
இது இந்திய அரசாங்கத்தின் மேக் இன் இந்தியா திட்டத்தின் முன்முயற்சிக்கான எங்கள் உறுதிப்பாட்டை மேலும் வலியுறுத்துகிறது என்றும் தெரிவித்தார்.
முன்னதாக, காணொலி வாயிலான கூட்டத்தில் பேசிய மின்னணு துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் , “முதலீடுகளுக்கு உகந்த நாடாக திகழ்வதுடன், மின்னணு, தகவல் தொழில்நுட்பப் பொருட்களைத் தயாரிக்கும் துறையில் சர்வதேச அளவில் மிகப்பெரிய நாடாக வளரும் ஆற்றலையும் இந்தியா பெற்றுள்ளது. நமது அரசின் உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை திட்டத்திற்கு உலகளவில் மிகப் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.
சென்னையில் உற்பத்தி நிலையத்தைத் தொடங்கும் அமேசானின் முடிவை நாங்கள் வரவேற்கிறோம். இதன் மூலம் உள்நாட்டு தயாரிப்புகளின் திறன் மேம்படுவதுடன், வேலைவாய்ப்புகளும் உருவாக்கப்படும். நமது தற்சார்பு இந்தியா கனவிற்கு இதன்மூலம் டிஜிட்டல் வாயிலாக அதிகாரமளிக்கப்படும்”, என்று கூறினார்.
இந்தியாவிற்கும், இந்தியாவிலிருந்து பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கும் நம் நாட்டில் மின்னணுப் பொருட்களின் உற்பத்தியை தொடங்க உள்ள அமேசானின் நடவடிக்கைகள் வெறும் துவக்கம் மட்டுமே என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
முன்னதாக, உள்ளூர் மற்றும் சர்வதேச கைபேசி மற்றும் மின்னணு உபகரணங்கள் தயாரிக்கும் 16 நிறுவனங்களுக்கு பொருள் சார்ந்த ஊக்கத்தொகை திட்டத்திற்கு மத்திய அமைச்சகம் ஒப்புதல் அளித்தது. இத்திட்டத்தின் கீழ், விற்பனையை பொறுத்து 4 முதல் 6 சதவீதம் வரை ஊக்கத்தொகையை மத்திய அரசு வழங்குகிறது.
அமேசான் நிறுவனம், இந்தியாவில் 2025ல் புதிதாக 10 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil