ஆர்.சந்திரன்
இந்தியாவின் இரும்பு நகரம் என சொல்லத்தக்க அளவு, வலுவான எஃகு ஆலைகளைக் கொண்ட ஜெம்ஷட்பூரில் இருந்து அடுத்த வங்கி மோசடி செய்தி வந்துள்ளது. இங்கே வாகன விற்பனை தொழிலில் ஈடுபட்டுள்ள ராம்னந்தி எஸ்டேட்ஸ் என்ற நிறுவனம், அதன் 4 இயக்குனர்கள் மீதும், கார்ப்ரேஷன் வங்கியின் மதிப்பீட்டாளர் சஞ்சய் குமார் மீதும் தற்போது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
பாட்னாவில் உள்ள இந்த வங்கிக் கிளை மூலம் 2014ம் ஆண்டு புதிய வாகன விற்பனை ஷோ ரூம் தொடங்க 10 கோடி ரூபாய் கடன் வழங்க முடிவு செய்யப்பட்டது. ஆனால், இந்த கடன் தவணை சரியாக வரவில்லை என்பதால், இது வாராக்கடன் ஆனது. அதனால், தற்போது அந்த சொத்து மீண்டும் மதிப்பிடப்பட்டுள்ளது.
அப்போதுதான் கடன் வழங்கும் முன் செய்யப்பட்ட மதிப்பீட்டில் உரிய மதிப்பை விட கூடுதலான மதிப்பு குறிப்பிடப்பட்டு கடன் பெறப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. அதனால், இப்போது அதில் தொடர்புடைய மதிப்பீட்டாளர் சஞ்சய் குமாரும் இவ் வழக்கில் சேர்க்கப்பட்டு அவர் மீதும் முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அனேகமாக, இவர்கள் அனைவரும் கைது செய்யப்படுவார்கள் என சொல்லப்படுகிறது. இந்த வழக்கு தற்போது சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.