/indian-express-tamil/media/media_files/2025/04/07/1yLKXEjvGatja5pZF0Zf.jpg)
1. புதிய வரி முறை:
புதிய வருமான வரி முறையில் வரி விலக்கு உச்ச வரம்பை உயர்த்தியது மட்டுமின்றி, வரி குறைப்பையும் செய்திருக்கிறது மத்திய அரசு. புதிய முறையின் கீழ் வருமான வரி விலக்கு உச்சவரம்பு ரூ.12 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது, மாதம் சராசரி வருமானம் ரூ.1 லட்சம் வரை வருமானம் ஈட்டுவோர் இனி வருமான வரி செலுத்த வேண்டியதில்லை. அத்துடன், நிலையான கழிவுத் தொகை ரூ.75,000 அளிக்கப்படுவதன் காரணமாக ரூ.12.75 லட்சம் வரை வருமானம் உள்ளவர்கள் வரி செலுத்த வேண்டியதில்லை என்று 2025-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
புதிய வருமான வரி விதிப்பு முறையின்படி, ரூ.12,75,000-க்கு மேல் கூடுதல் வருவாய் ஈட்டுவோர் செலுத்த வேண்டிய வரி விகிதம் இது:
ரூ.4 லட்சம் வரை - வரி இல்லை
ரூ.4 லட்சம் முதல் ரூ.8 லட்சம் வரை - 5%
ரூ.8 லட்சம் முதல் ரூ.12 லட்சம் வரை 10%
ரூ.12 லட்சம் முதல் ரூ.16 லட்சம் வரை - 15%
ரூ.16 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை - 20%
ரூ.20 லட்சம் முதல் ரூ.24 லட்சம் வரை - 25%
ரூ.24 லட்சத்துக்கு மேல் 30%
ரூ.12 லட்சத்துக்கு மேல் ஆண்டு வருமானம் உள்ளவர்களுக்கு முதல் ரூ.4 லட்சத்துக்கு வரி இல்லை. அடுத்த ரூ.4 லட்சத்துக்கு 5% அடிப்படையில் ரூ.20,000, அதற்கு அடுத்த ரூ.4 லட்சத்துக்கு 10% அடிப்படையில் ரூ.40,000 என மொத்தம் ரூ.60,000 வரியாக செலுத்த வேண்டும் என்பதை இங்கே கவனிக்க வேண்டும்.
உதாரணமாக ரூ.13 லட்சம் ஆண்டு வருமானம் உள்ளவர்கள், மேல் கொடுக்கபட்டுள்ள வரி விகிதம்படி 5% (20,000) + 10% (ரூ.40,000) இது தவிர ரூ.1 லட்சத்துக்கு ரூ.15% என்று ரூ.15,000 மொத்தமாக ரூ.75,000 வரியாக செலுத்த வேண்டியிருக்கும். மாத சம்பளத்தில் வெறும் ரூ.25,000-ஐ கூடுதலாக பெறும்போது, ரூ.75,000 வரை வரி செலுத்தும் நிலை ஏற்படுகிறது.
2. டி.டி.எஸ்
புதிய டி.டி.எஸ் (TDS) விதிகளின்படி தொடர் வைப்புத் தொகை (RD) மற்றும் நிலையான வைப்புத் தொகை (FD) முதலீடுகளுக்கு பெரிய நிவாரணம் கிடைக்கும். ஏப்ரல் 1, 2025 முதல் மூத்த குடிமக்கள் ஃபிக்சட் டெபாசிட் மற்றும் தொடர் வைப்பு நிதிகள் மூலம் கிடைக்கும் வருமானத்தில் ரூ.1 லட்சம் வரை வரி விதிக்கப்படாது. அதற்குமேல் தாண்டினால் மட்டுமே TDS கழிக்கப்படும்.
மூத்த குடிமக்கள் அல்லாதவர்களுக்கு (சாதாரண குடிமக்கள்), வட்டி வருமானத்திற்கான TDS வரம்பை அரசாங்கம் ரூ.40,000 லிருந்து ரூ.50,000 ஆக உயர்த்தியுள்ளது, இது ஏப்ரல் 2025 முதல் அமலுக்கு வருகிறது. இந்த நடவடிக்கை வைப்புத்தொகையாளர்கள் மீதான வரிச்சுமையைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது,
3. டி.சி.எஸ்:
வெளிநாட்டு பயணம், முதலீடுகள் உள்ளிட்ட பரிவர்த்தனைகளுக்கு டி.சி.எஸ் விலக்கு வரம்பு ரூ.7 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சமாக உயர்த்தப்படுகிறது. குழந்தைகளின் கல்விக்காகவோ, குடும்பச் செலவுக்காகவோ அல்லது வேறு ஏதேனும் காரணங்களுக்காகவோ நீங்கள் வெளிநாடுகளுக்கு பணம் அனுப்பினால், இப்போது உங்களுக்கு ஒரு சலுகை கிடைக்கிறது. இதுமட்டுமின்றி கல்விக்கடன் மூலம் பணம் அனுப்பினால், அதற்கு டி.சி.எஸ் வசூலிக்கப்படாது.
4. யூலிப் வரி:
யூலிப் (ULIP) என்பது "யூனிட் லிங்க்ட் இன்சூரன்ஸ் பிளான்" (Unit Linked Insurance Plan) என்பதன் சுருக்கம், அதாவது முதலீடு மற்றும் காப்பீடு இரண்டையும் வழங்கும் ஒரு காப்பீட்டுத் திட்டம். முதலீட்டின் ஒரு பகுதி காப்பீட்டுத் திட்டத்திற்கும், மீதமுள்ள பகுதி பங்கு மற்றும் கடன் பத்திரங்களிலும் முதலீடு செய்யப்படுகிறது. 2.5 லட்சம் ரூபாய்க்கு மேல் பிரீமியம் கொண்ட யூலிப் திட்டம் அளிக்கும் பலன், மூலதன ஆதாயமாக கருதப்படும். தற்போது, ரூ.2.5 லட்சத்திற்கு மேல் பிரீமியம் கொண்ட யூலிப் திட்டம் அளிக்கும் பலன் மூலதன ஆதாயமாக கருதப்பட்டு, ஓராண்டுக்கு மேல் வைத்திருக்கும் போது, 12.5% நீண்டகால மூலதன ஆதாய வரி பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது. உதாரணமாக ரூ.10 லட்ச ரூபாய் லாபமாக கிடைக்கிறது என்றால், அதற்கு 12.5% (ரூ.1.25 லட்சம்) வரி போக ரூ.8.75 லட்சம் நமக்கு கிடைக்கும்.
5. தொழில்முனைவோருக்கு வரி விலக்கு:
ஏப்ரல் 1- 2030-க்குள் புதிதாக தொழில் தொடங்குபவர்களுக்கு (ஸ்டார்ட் அப்) பிரிவு 80-IAC படி 100% வரி விலக்கு அளிக்கப்படுகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.