Ashok Leyland: இந்துஜா குழுமத்தின் முதன்மை நிறுவனமான அசோக் லேலண்ட் அதன் பல்வேறு உற்பத்தி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவித்துள்ளது. "எங்கள் தயாரிப்புகளுக்கான தேவை குறைந்த காரணத்தினால், செப்டம்பர் 2019-ல் எங்களின் பல்வேறு ஆலைகளில் வேலை இல்லாமல் இருக்கின்றன.” என்று அந்நிறுவனம் பி.எஸ்.இ தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள மந்த நிலை காரணமாக பல நிறுவனங்கள் தங்களது உற்பத்தியை நிறுத்திக் கொண்டுள்ளன. அந்த வகையில், ஆட்டோ மொபைல் துறையிலும் மந்த நிலை தொடருவதால், பல உற்பத்தியாளர்கள் மற்றும் சப்ளையர்கள் தங்களது உற்பத்தியைக் குறைத்து தற்காலிகமாக ஆலைகளை மூடும் நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது.
அதன்படி, சென்னை, எண்ணூரில் உள்ள உற்பத்தி ஆலைக்கு 16 நாட்களும், தமிழக பிரிவில் ஓசூரில் உள்ள 1 மற்றும் 2-வது ஆலைகளுக்கு 5 நாட்களும், ராஜஸ்தானின் ஆல்வார், மகாராஷ்டிராவின் பந்தாரா ஆலைகளுக்கு தலா 10 நாட்களும், உத்தரகாண்டின் பண்ட்நகர் ஆலைக்கு 18 நாட்களும் விடுமுறை விடப்படுவதாக தேசிய பங்கு சந்தைக்கு அசோக் லேலண்ட் நிறுவனம் கடிதம் எழுதியுள்ளது.
கடந்த மாதம், சென்னையைச் சேர்ந்த ’டி.வி.எஸ்’ குழுமத்தின் ’சுந்தரம் கிளேட்டன்’, ஆட்டோமொபைல் நிறுவனமான ’மாருதி சுசுகி’ மற்றும் இரு சக்கர வாகன உற்பத்தியாளர் ’ஹீரோ மோட்டோகார்ப்’ ஆகியவை சந்தை தேவைக்கு ஏற்ப தங்களது உற்பத்தியை நிறுத்துவதாக அறிவித்திருந்தன. டாடா மோட்டார்ஸ் மற்றும் மகேந்திரா ஆகிய நிறுவனங்களும், சந்தையின் தேவைக்கு ஏற்ப உற்பத்தியை ஆட்டோமொபைல் உற்பத்தியை நிறுத்துவதாகக் கூறியுள்ளன.
தற்போது வெளியாகியுள்ள கார் விற்பனையின் தரவுகளின் படி, பயணிகள் வாகன விற்பனை ஆண்டுக்கு 31.57% சரிந்துள்ளது தெரிய வருகிறது. 1997-98 ஆம் ஆண்டு முதல் பதிவு செய்யப்பட்டு வரும் இந்தத் தரவில் மோசமான ரெக்கார்ட் இது தான்.
சில்லறை விற்பனையும் மெதுவாக நகர்கிறது. விற்பனையாளர்கள் அதிக முதலீடு மற்றும் சரக்குகளுடன் சோர்வடைந்திருக்கிறார்கள். இதனால் உற்பத்தியாளர்கள் அனுப்பும் சரக்குகளின் அளவும் குறைந்துள்ளது. இத்தகைய சூழ்நிலையில், உற்பத்தியாளர்கள் தங்களது நிறுவனத்துக்கு விடுமுறை அளிப்பதை விட வேறு வழியில்லாத நிலை ஏற்பட்டிருக்கிறது.
அசோக் லேலண்டின் பங்குகள் ஒவ்வொன்றும் ரூ 63.05 க்கு வர்த்தகம் செய்யப்பட்டுள்ளன. இது பங்கு சந்தையின் முந்தைய முடிவை விட 1.33% குறைவு