பணம் எடுக்க, டெபாசிட் செய்ய பயன்படும், ஏ.டி.எம் இயந்திரத்தில், இனி காசோலையை செலுத்தி ரொக்கம் பெற முடியும்.
கடன் வசதி தொடங்கி, கிரேடிட் கார்டு என ஏகப்பட்ட வசதிகள் வாடிக்கையாளர்கள் சேவைக்கு வந்து விட்டது. இது வாடிக்கையாளர்களை பெருமளவில் கவர்ந்துள்ளது.
வங்கி வாடிக்கையாளர்கள், முதலில், ஏ.டி.எம் இயந்திரத்தில் உள்ள ‘லைவ் டெல்லர்’ பிரிவின் இணைப்பை பெற வேண்டும். ஒரு பொத்தானை அழுத்தி, இந்த இணைப்பை பெறலாம். உடனே, ஏ.டி.எம் இயந்திரத்தின் முழு கட்டுப்பாடும், வாடிக்கையாளரின் வங்கி அலுவலரிடம் வந்து விடும். அவரின் அனுமதியை அடுத்து ஏ.டி.எம் சாதனத்தில் காசோலையை செலுத்த வேண்டும்.
மேலும் ஏதாவது ஒரு அடையாளச் சான்றை, அந்த இயந்திரத்திலேயே ‘ஸ்கேன்’ செய்து, அளிக்க வேண்டும். பின், ஏ.டி.எம் மானிட்டர் திரை மீது வாடிக்கையாளர் கையொப்பம் இட வேண்டும். அனைத்தையும் பரிசீலித்து ஒரு நிமிடத்திற்குள் இயந்திரம் பணம் வழங்கும்.
தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப, வாடிக்கையாளர்கள் பல மதிப்புகளில் ரொக்கத்தை தேர்வு செய்யலாம். இந்த முறையில் உள்ளூர் மற்றும் வெளியூர் காசோலைகளுக்கு உடனடியாக பணம் பெற முடியும். இந்த ஏ.டி.எம் இயந்திரத்தில் ‘டெபிட்’ கார்டு இல்லாமல் ‘ஆதார்’ எண்ணை தெரிவித்து ரொக்கம் பெறும் வசதியும் உள்ளது.