கனரா வங்கி தனது சேமிப்பு கணக்குகள் அனைத்திற்கும் சராசரி மாதாந்திர இருப்பு (மினிமம் பேலன்ஸ்) தேவையை ரத்து செய்துள்ளது. இந்த புதிய விதி, ஜூன் 1 முதல் அமலுக்கு வந்தது. இந்த நடவடிக்கைக்கு வாடிக்கையாளர்கள் இடையே வரவேற்பு கிடைத்துள்ளது.
"இந்த புதிய கொள்கையின் மூலம், கனரா வங்கியின் அனைத்து சேமிப்பு கணக்குதாரர்களும் 'குறைந்தபட்ச இருப்பு தொகை இல்லாவிட்டாலும் அபராதம் கிடையாது' என்ற சலுகையை பெறுவார்கள்" என கனரா வங்கியின் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு வங்கிகளுடன் ஒரு ஒப்பீடு:
கனரா வங்கியின் இந்த சலுகை தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்த நிலையில் மற்ற முன்னணி வங்கிகள், தங்கள் சேமிப்புக் கணக்குகளுக்கு என்னென்ன குறைந்தபட்ச சராசரி மாதாந்திர இருப்பு தேவைகளை வைத்துள்ளன என்பதைப் பார்ப்போம்.
எஸ்.பி.ஐ: எஸ்.பி.ஐ-க்கு குறைந்தபட்ச இருப்புத் தேவை இல்லை. இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்.பி.ஐ, சேமிப்புக் கணக்கில் குறைந்தபட்ச தொகையை பராமரிக்கத் தவறினால் எந்த அபராதத்தையும் விதிப்பதில்லை. இது வாடிக்கையாளர்களுக்கு கிடைத்துள்ள சலுகையாகும்.
ஹெச்.டி.எஃப்.சி வங்கி: ஹெச்.டி.எஃப்.சி வங்கியில் ஒரு வழக்கமான சேமிப்பு கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள், நகர்ப்புறங்களில் குறைந்தபட்சம் ரூ.10,000 சராசரி மாதாந்திர இருப்பைப் பராமரிக்க வேண்டும். இதற்குப் பதிலாக, ஒரு வருடம் மற்றும் ஒரு நாள் என்ற குறைந்தபட்ச காலவரையறைக்கு ரூ.1 லட்சம் வைப்புத் தொகையையும் (FD) தேர்வு செய்யலாம்.
நகர்ப் பகுதிகளில் உள்ள கிளைகளுக்கு, ஹெச்.டி.எஃப்.சி வங்கியின் குறைந்தபட்ச இருப்புத் தேவை ரூ.5,000, அல்லது ஒரு வருடம் மற்றும் ஒரு நாளுக்கு ரூ. 50,000 வைப்புத் தொகை என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கிராமப்புறங்களுக்கு, குறைந்தபட்ச சராசரி மாதாந்திர இருப்பு ரூ. 2,500 அல்லது ரூ.25,000 வைப்புத் தொகை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இருப்பு தொகை பராமரிக்கப்படாவிட்டால், நகர்ப்புறக் கணக்குகளுக்கு ரூ. 600 வரையிலும், கிராமப்புற பகுதிகளுக்கு ரூ.300 வரையிலும் அபராதம் விதிக்கப்படலாம்.
ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி: ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியில் Easy Receive கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் மெட்ரோ அல்லது நகர்ப்புறங்களில் வசிப்பவராக இருந்தால், குறைந்தபட்சம் ரூ.10,000 இருப்புத் தொகையை பராமரிக்க வேண்டும். கிராமப்புறங்களில் குறைந்தபட்ச இருப்புத்தொகை ரூ. 5,000 ஆகும்.
குறைந்தபட்ச மாதாந்திர சராசரி இருப்பைப் பராமரிக்காதவர்களுக்கு அதிகபட்சமாக ரூ. 450 வரை அபராதம் விதிக்கப்படலாம்.