bank holidays : செப்டம்பர் மாதத்தில் தொடர்ந்து 4 நாட்கள் வங்கிகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் உஷார் நிலையில் இருப்பது அவசியம். முன்னதாகவே திட்டமிட்டு தேவையான பணிகளை முடித்துக் கொண்டால் இந்த சிக்கலில் இருந்து தப்பிக்கலாம்.
வரும் செப்டம்பர் 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில், வங்கிகள் இரண்டு நாள் தேசிய வேலைநிறுத்தத்தை அறிவித்துள்ளன.இதில் அனைத்து வங்கிகளின் அதிகாரிகளும் ஈடுபடுவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், வங்கிகள் செயல்படுவதில் மந்தம் நிலை காணப்படும் அல்லது வங்கிகள் மூடப்படவும் வாய்ப்புகள் அதிகம்.
பொதுதுறை வங்கிளான பாங்க் ஆப் பரோடா, இந்தியன் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி உள்ளிட்ட வங்கிகளுடன் பிற 10 வங்கிகளை இணைக்க மத்திய அரசு முடிவு செய்து கடந்த வாரம் அறிவிப்பை வெளியிட்டது. இதன் மூலம் நாட்டின் பொதுத்துறை வங்கிகளின் மொத்த எண்ணிக்கை 12-ஆக குறைக்கப்படும் என்ற தகவலும் வெளியாகியது. மத்திய அரசின் இந்த முடிவுக்கு தொடர்ந்து எதிர்ப்புகள் பதிவாகின. இதனால் வங்கியில் பணிப்புரிபவர்கள் வேலை இழக்கும் அபாயமும் ஏற்படும் எனவும் தெரிவிக்கப்பட்டன.
இந்நிலையில் இந்த முடிவைக் கண்டித்து, வருகிற 25-ஆம் தேதி (புதன்கிழமை) நள்ளிரவு முதல் 27 ஆம் தேதி நள்ளிரவு வரை என 2 நாட்கள் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளன. இது தவிர, செப்டம்பர் 28-ஆம் தேதி மாதத்தின் கடைசி சனிக்கிழமை என்பதால், வங்கிகளில் எந்த வேலையும் இருக்காது, தொடர்ந்து செப்டம்பர் 29-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை விடுமுறை இருக்கும். எனவே செப்டம்பர் 26 துவங்கி 29-ஆம் தேதி வரை என நான்கு நாட்கள் வங்கிகள் வேலை தடைபடும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
எனவே தொடர்ந்து 4 நாட்கள் வங்கி சேவைகள் பாதிக்கபடும். ஏடிஎம்களிலும் பணம் பற்றாக்குறை உண்டாகும். எனவே பொதுமக்கள் முன்னதாகவே தங்கள் வங்கி சார்ந்த பணிகளை முடித்துக் கொள்வது நல்லது. அவசர தேவைகளுக்கான தொகையை, முன்னரே எடுத்து வைத்துக்கொள்வது மிகச் சிறந்த தீர்வாகும்.