New Update
/indian-express-tamil/media/media_files/2025/07/06/bob-2025-07-06-18-07-21.jpg)
சேமிப்பு கணக்குகளில் குறைந்தபட்ச மாதாந்திர இருப்பு தொகையை பராமரிக்காததற்கான அனைத்து அபராதங்களும் ஜூலை 1, 2025 முதல் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்கி கணக்குகளில் குறைந்தபட்ச மாதாந்திர இருப்பு தொகையை (MAB - Monthly Average Balance) பராமரிக்காதவர்களுக்கு விதிக்கப்படும் அபராத கட்டணங்கள் குறித்து வங்கிகள் மீது வாடிக்கையாளர்கள் இடையே நீண்ட காலமாக ஒரு அதிருப்தி நிலவி வந்தது.
இந்நிலையில், பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பேங்க் ஆஃப் பரோடா, தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, சேமிப்பு கணக்குகளில் குறைந்தபட்ச மாதாந்திர இருப்பு தொகையை பராமரிக்காததற்கான அனைத்து அபராதங்களும் ஜூலை 1, 2025 முதல் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பேங்க் ஆஃப் பரோடா வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பு, வாடிக்கையாளர் நலனை மேம்படுத்தும் ஒரு நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது. இந்த புதிய திட்டத்தின் கீழ், சேமிப்புக் கணக்கு வைத்திருப்பவர்கள் இனி குறைந்தபட்ச இருப்புத் தொகை குறைபாடு காரணமாக எந்தவித அபராதமும் செலுத்த வேண்டியதில்லை. இது லட்சக்கணக்கான வாடிக்கையாளர்களுக்கு நிம்மதியை அளிக்கும்.
இருப்பினும், இந்த கட்டண ரத்து சலுகை, வங்கியின் பிரீமியம் சேமிப்பு கணக்கு திட்டங்களுக்கு பொருந்தாது என்றும் பேங்க் ஆஃப் பரோடா தெளிவுபடுத்தியுள்ளது. அதாவது, குறிப்பிட்ட பிரீமியம் கணக்குகளை வைத்திருப்பவர்கள் தொடர்ந்து குறைந்தபட்ச இருப்பு தொகையை பராமரிக்க வேண்டும், இல்லையெனில் அதற்கான அபராத கட்டணங்கள் விதிக்கப்படும்.
பேங்க் ஆஃப் பரோடாவின் செயல் இயக்குநர் பீனா வாகீத் இது குறித்து பேசுகையில், "குறைந்தபட்ச இருப்பு தொகைக்கான கட்டணங்களை நீக்குவது, எங்கள் வாடிக்கையாளர்களுக்கான பேங்க் ஆஃப் பரோடாவின் தொடர்ச்சியான உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது. இது வங்கி சேவைகளை அனைவரும் எளிதில் அணுகும்படி செய்கிறது. மேலும், எங்கள் வாடிக்கையாளர்களுக்கு மதிப்புமிக்க வங்கி சேவைகளை வழங்குவதற்கான எங்கள் முயற்சிகளை இது மேலும் பலப்படுத்துகிறது" என்று தெரிவித்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.