பொதுமக்களுக்கு போதுமான அளவில் ரூ. 100, ரூ. 200 ஆகிய நோட்டுகள் கிடைப்பதை உறுதி செய்யும் ரீதியில், அனைத்து ஏ.டி.எம்-களிலும் குறிப்பிட்ட ரூபாய் நோட்டுகள் விநியோகிக்கும் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று ஆர்.பி.ஐ அறிவுறுத்தியுள்ளது.
இது தொடர்பான சுற்றறிக்கையை ரிசர்வ் வங்கி நேற்று (ஏப்ரல் 28) வெளியிட்டது. அதில், "அடிக்கடி பயன்படுத்தப்படும் ரூபாய் நோட்டுகளுக்கான பொது அணுகலை மேம்படுத்துவதற்கான முயற்சியின் ஒரு பகுதியாக, அனைத்து வங்கிகள் மற்றும் ஒயிட் லேபிள் ஏ.டி.எம் ஆபரேட்டர்கள், தங்கள் ஏ.டி.எம் மையங்களில் ரூ. 100 மற்றும் ரூ. 200 ஆகியவற்றின் நோட்டுகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த வகையில், வரும் செப்டம்பர் மாதம் 30-ஆம் தேதிக்குள் 75 சதவீத ஏ.டி.எம்-களில் இந்த ரூபாய் நோட்டுகள் விநியோகிக்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 31-ஆம் தேதிக்குள் 90 சதவீத ஏ.டி.எம்-களில் இந்த ரூபாய் நோட்டுகள் விநியோகம் ஆவதை உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெரும்பாலான ஏ.டி.எம்-களில் பணம் எடுக்கும் போது, ரூ. 500 மதிப்பிலான நோட்டுகளை மட்டுமே பயனர்கள் பெறுகின்றனர். இதனால், சிறிய அளவிலான பணப்பரிவர்த்தனைகளுக்கு சிரமமாக இருப்பதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே, ஏ.டி.எம்-களில் பணம் எடுப்பதற்கான பரிவர்த்தனை கட்டணத்தை இரண்டு ரூபாய் உயர்த்தி, ரூ. 23 ஆக நிர்ணயிக்கப்பட்டது. இந்த நடைமுறை மே ஒன்றாம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.