2024-25 இடைக்கால பட்ஜெட் ஹைலைட்ஸ்: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், வரவிருக்கும் நிதியாண்டுக்கான (2024-25) மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். லோக்சபா தேர்தலுக்கு முந்தைய கடைசி பட்ஜெட் என்பதால், இது இடைக்கால பட்ஜெட் தான்.
ஆங்கிலத்தில் படிக்க: Budget 2024 Key Highlights: Fiscal deficit target for 2024-25 at 5.1% of GDP; no changes to income tax slabs
வரி அடுக்குகளில் எந்த மாற்றமும் அறிமுகப்படுத்தப்படவில்லை. இதற்கிடையில், 2024-25 (FY25)க்கான நிதிப்பற்றாக்குறை இலக்கு, அதாவது அரசாங்கத்தின் வருவாய் மற்றும் செலவுகளுக்கு இடையிலான இடைவெளி, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 5.1% ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு புதிய அரசு பதவியேற்றவுடன், அடுத்த ‘முழு பட்ஜெட்’ ஜூலை மாதம் தாக்கல் செய்யப்படும்.
பட்ஜெட் 2024: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த 2024-25 யூனியன் பட்ஜெட்டில் இருந்து முக்கிய அம்சங்கள்
திருத்தப்பட்ட நிதிப்பற்றாக்குறை, அதாவது அரசாங்கத்தின் வருவாய் மற்றும் செலவுகளுக்கு இடையிலான இடைவெளி, 2023-24 (FY24)க்கான மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5.8% ஆகும். FY25 இல் நிதிப் பற்றாக்குறை GDP யில் 5.1% ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2025-26ல் (FY26) நிதிப் பற்றாக்குறையை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.5%க்குக் குறைப்பதே இலக்கு.
வருமான வரி அடுக்குகளில் எந்த மாற்றமும் இல்லை.
ஒரு முக்கிய அறிவிப்பில், 2009-10 நிதியாண்டு வரையிலான காலக்கட்டத்தில் ரூ.25,000 வரையிலும், 2010-11 முதல் 2014-15 வரையிலான நிதியாண்டுகளுக்கு ரூ.10,000 வரையிலும் நிலுவையில் உள்ள நேரடி வரிக் கோரிக்கைகளைத் திரும்பப் பெற அரசு முடிவு செய்துள்ளது.
வரி தாக்கல் செய்பவர்களின் எண்ணிக்கை 2.4 மடங்கு அதிகரித்துள்ளது என்று நிர்மலா சீதாராமன் கூறினார். 2014ல் இருந்து நேரடி வரி வசூல் மூன்று மடங்காக அதிகரித்துள்ளது. 2024-25ல் வரி வரவுகள் ரூ.26.02 லட்சம் கோடியாக இருக்கும்.
பயணிகள் ரயில்களின் செயல்பாடுகளை மேம்படுத்தும் முயற்சியில், எரிசக்தி, கனிம மற்றும் சிமென்ட் வழித்தடங்கள், துறைமுக இணைப்புத் தாழ்வாரங்கள் மற்றும் அதிக போக்குவரத்து அடர்த்தி தாழ்வாரங்கள் ஆகிய மூன்று முக்கிய பொருளாதார ரயில்வே வழித்தடத் திட்டங்களை நிர்மலா சீதாராமன் அறிவித்தார். "அவை தளவாடங்களின் செயல்திறனை மேம்படுத்துவதோடு செலவைக் குறைக்கும். இதன் விளைவாக அதிக போக்குவரத்து நெரிசல் குறைவது, பயணிகள் ரயில்களின் செயல்பாடுகளை மேம்படுத்தவும், பயணிகளுக்கு பாதுகாப்பு மற்றும் அதிக பயண வேகத்தை ஏற்படுத்தவும் உதவும்" என்று நிர்மலா சீதாராமன் கூறினார். இது தளவாடச் செலவையும் குறைக்கும்.
பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா - கிராமம் (PMAY-G) திட்டத்தின் கீழ் மேலும் 2 கோடி வீடுகளை நிதி அமைச்சர் அறிவித்தார்.
“நமது தொழில்நுட்ப ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு, இது பொற்காலமாக இருக்கும். 50 வருட வட்டியில்லா கடன் வழங்க ரூ.1 லட்சம் கோடிக்கான நிதி தொகுப்பு நிறுவப்படும். இந்த நிதித் தொகுப்பு நீண்ட கால நிதியுதவி மற்றும் மறு நிதியுதவியை நீண்ட காலத்திற்கு குறைந்த அல்லது பூஜ்ய வட்டி விகிதத்தில் வழங்கும். இது சூரிய உதய களங்களில் ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளை கணிசமாக அதிகரிக்க தனியார் துறையை ஊக்குவிக்கும்.
“நமது இளைஞர்களின் சக்தியையும் தொழில்நுட்பத்தையும் இணைக்கும் திட்டங்களை நாம் கொண்டிருக்க வேண்டும். பாதுகாப்பு நோக்கங்களுக்காக ஆழமான தொழில்நுட்பத்தை வலுப்படுத்துவதற்கும் ஆத்மா நிர்பர்தாவை விரைவுபடுத்துவதற்கும் ஒரு புதிய திட்டம் தொடங்கப்படும், ”என்று நிர்மலா சீதாராமன் கூறினார்.
“பல்வேறு துறைகளின் கீழ் இருக்கும் மருத்துவமனை உள்கட்டமைப்பை” பயன்படுத்தி மேலும் மருத்துவக் கல்லூரிகளை அமைக்கும் திட்டத்தையும் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். "இந்த நோக்கத்திற்காக ஒரு குழு அமைக்கப்படும், சிக்கல்களை ஆய்வு மற்றும் பொருத்தமான பரிந்துரைகளை செய்ய இந்தக் குழு செயல்படும்," என்று நிதியமைச்சர் கூறினார்.
"முத்தலாக் சட்டத்தை சட்டவிரோதமாக்கியது, மக்களவை மற்றும் மாநில சட்டசபைகளில் பெண்களுக்கு 1/3 இட ஒதுக்கீடு, கிராமப்புறங்களில் 70 சதவீத வீடுகளை பெண்களுக்கு வழங்குவது அவர்களின் கண்ணியத்தை உயர்த்தியுள்ளது" என்று நிர்மலா சீதாராமன் கூறினார்.
“ரூஃப்-டாப் சோலாரைசேஷன் மூலம், 1 கோடி குடும்பங்கள் ஒவ்வொரு மாதமும் 300 யூனிட் வரை இலவச மின்சாரம் பெற இயலும். அயோத்தியில் ஸ்ரீ ராமர் கோவில் கும்பாபிஷேகம் செய்யப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க நாளில் பிரதமரின் தீர்மானத்தை பின்பற்றி இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.” 2070-க்குள் ‘நிகர பூஜ்ஜியத்தை’ அடைவதை அரசாங்கம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
சுற்றுலாவை மேம்படுத்த, "மாநிலங்களுக்கு வளர்ச்சியை ஊக்குவிக்க நீண்ட கால வட்டியில்லா கடன்கள் வழங்கப்படும்."
நிர்மலா சீதாராமன் தனது உரையைத் தொடங்கி, கடந்த 10 ஆண்டுகளில் இந்தியப் பொருளாதாரம் நேர்மறையான மாற்றத்தைக் கண்டுள்ளது என்று குறிப்பிட்டார்.
"ஏழைகள், பெண்கள், இளைஞர்கள் மற்றும் விவசாயிகள் - அவர்களின் தேவைகள், அவர்களின் அபிலாஷைகள் நாட்டின் வளர்ச்சிக்கு வழிகாட்டும்."
"2047-க்குள் இந்தியாவை 'விக்சித் பாரத்' ஆக்குவதில் அரசாங்கம் செயல்பட்டு வருகிறது... எங்கள் கவனம் சப்கா சத், சப்கா விகாஸ்," என்று நிர்மலா சீதாராமன் கூறினார்.
"GDP - நிர்வாகம், வளர்ச்சி மற்றும் செயல்திறன் ஆகியவற்றில் அரசாங்கம் சமமாக கவனம் செலுத்துகிறது."
சமூக நீதி குறித்து, பேசிய நிதியமைச்சர், "நமது அரசாங்கம் அனைத்துத் துறையிலும், அனைத்துப் பரவலான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கான அணுகுமுறையுடன் செயல்படுகிறது." என்று கூறினார்.
இடைக்கால பட்ஜெட்டுக்கு முந்தைய மறுஆய்வு அறிக்கையில், இந்தியப் பொருளாதாரம் வரும் ஆண்டுகளில் 7 சதவீதத்துக்கும் அதிகமாக வளர்ச்சியடையும் என்றும், அடுத்த மூன்று வருடங்களில் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறும் என்றும் நிதி அமைச்சகம் கணித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“