ஒருபக்கம் கடன் கிடைக்காமல் பலர் அலைந்து கொண்டிருக்கும் நிலையில் இன்னொரு பக்கம் கடன் வேண்டுமா? என கார்ப்பரேட் நிறுவனங்களும் வங்கிகளும் தினமும் போன் மூலம் கேட்டு வருகின்றனர். இந்த நிலையில் கார்ட்லெஸ் கடன் என்ற கார்டு இல்லாமலேயே கடன் என்பதை நீங்கள் கேள்விப்பட்டிருக்கின்றீர்களா? இல்லை என்றால் இதோ தெரிந்து கொள்ளுங்கள்
அமேசான், பிளிப்கார்ட் நிறுவனங்கள் தங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு எந்த டெபிட், கிரெடிட் கார்டும் இல்லாமல் கடனுக்குப் பொருள்களை வழங்கத் தயாராக உள்ளன.
இதை முதலில் அமேசான் தான் அறிமுகப்படுத்தியது. அடுத்தநாளே பிளிப்கார்ட்டும் அறிவித்தது. இந்தத் திட்டத்தில் ரூ. 60 ஆயிரம் வரைக்கும் கடனில் பொருள்களை வாங்க முடியும் என்று அறிவித்துள்ளது.
சரி எப்படி இந்த வசதியைப் பயன்படுத்திக்கொள்வது, எல்லோருக்கும் இந்த வசதி கிடைக்குமா என்பதைப் பார்க்கலாம். இதுபோன்ற வசதிகளில் வாடிக்கையாளர்கள் ஏமாற்றவும் செய்யலாம் என்பதால் ரொம்பவே இந்தத் திட்டத்தைப் பாதுகாப்பாக உருவாக்கியிருக்கிறார்கள். கடன் பெறுவதற்கு தகுதியுள்ளவரா என்ற சோதனையில் தேர்வானால் மட்டுமே கடன் கிடைக்கும்.
இந்த வசதியைப் பயன்படுத்திக்கொள்ள ஆதார் எண் சரிபார்த்தல் அவசியம். ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட உங்களுடைய மொபைல் எண்ணுக்கு ஒன் டைம் பாஸ்வோர்டு அனுப்பப்படும் அதையெல்லாம் கொடுத்தால் மட்டுமே இந்த வசதியைப் பயன்படுத்திக்கொள்ள முடியும்.
2000க்கும் குறைவான மதிப்புள்ள பொருள்களை வாங்குவதற்கு ஓன் டைம் பாஸ்வேர்டு சரிபார்த்தல் அவசியமில்லை. வாடிக்கையாளர்கள் இதற்கு முன் பொருள்கள் வாங்கியிருப்பதைப் பொறுத்து நமக்கான கடன் தொகையை நிர்ணயிக்கின்றனர்.
இந்த வசதி ஒரு இ-வாலட் போல செயல்படும். நம்முடைய தகவல்கள் அனைத்தும் சரிபார்க்கப்பட்ட பிறகு நமக்கான கடன் தொகையை பிளிப்கார்ட் செயலியில் வரவு வைக்கும். இந்தத் தொகை 60 நொடிகளில் நமக்கு வந்துவிடும். அந்தத் தொகையை வைத்து நாம் நமக்கான பொருள்களை வாங்கிக் கொள்ளலாம்.