ஆர்.சந்திரன்
கர்ப்பத்தைத் தடுக்க உதவும் ஆணுறை தயாரிப்பில் ஈடுபட்டுள்ள 10 நிறுவனங்கள் மீது விசாரணை நடப்பதாக மின்ட் என்ற வணிக செய்தித்தாள் செய்தி வெளியிட்டுள்ளது.
சமூக நல்வாழ்வு துறை மூலம் வினியோகம் செய்வது உள்ளிட்ட அரசின் பல திட்டங்களுக்கு தேவையான ஆணுறை தேவைக்கு, பல்வேறு நிறுவனங்களிடம் இருந்து அவை ஆண்டுதோறும் வாங்கப்படுகின்றன. இதில் 2014ம் ஆண்டுக்கான தேவைக்காக, மத்திய அரசு 50.4 கோடி ஆணுறை வாங்க ஏலப்புள்ளி மூலம் நிறுவனங்களின் விலையைக் கோரியபோது, தவறு இழைத்ததாக 10 நிறுவனங்கள் மீது தற்போது விசாரணை நடப்பதாகக் கூறப்பட்டுள்ளது.
ஒரு ஆணுறையின் தயாரிப்பு செலவு சுமார் 75 பைசா வரைதான் எனவும், ஆனால், இந்த 10 நிறுவனங்கள் கூட்டணி அமைத்துக் கொண்டு கூடுதல் விலையில் ஏலப்புள்ளி மூலம் விண்ணப்பித்து 1.80 ரூபாய் வரை என, அதிக விலை பெற்றன எனவும் கூறப்பட்டுள்ளது. இந்த தகவல் ஆரம்பகட்ட விசாரணையில் தெரிய வந்ததால், தற்போது சிசிஐ எனப்படும் வணிகப் போட்டி உறுதி ஆணையம் என குறிப்பிடப்படும் மத்திய அரசின் அமைப்பு விரிவான விசாரணையை மேற்கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது.