தங்கம் விலை விண்ணை முட்டிவரும் நிலையில், தங்களிடம் உள்ள பழைய தங்க நகை, நாணயத்தை விற்று பணமாக்க பலரும் விரும்புகின்றனர். ஆனால், வங்கிகளிலும், நகைக்கடைகளிலும் பல மணிநேரம் காத்திருக்க வேண்டிய அவசர நிலை உருவாகிறது. மேலும், நஷ்டமின்றி தங்கத்துக்கு ஈடான முழுப்பணமும் எங்கும் கிடைக்காது என்பதால், தங்கத்தை விற்க தயக்கம் ஏற்படுகிறது. இதை தவிர்க்கும் வகையில், சீனாவின் ஷாங்காய் நகரில் 'சைனா கோல்டு' என்ற நிறுவனம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள தங்க ஏ.டி.எம். சீன மக்களிடம் அமோக ஆதரவைப் பெற்றுள்ளது.
இந்த இயந்திரத்தில், நகையை வைத்தால், அதை எடை போட்டு, எவ்வளவு என்பதை திரையில் காட்டும். இந்த இயந்திரம் தங்க நகைகளை பகுப்பாய்வு செய்து, உருக்கி, எடை போட்டு அதன் தூய்மையை கணக்கிட்டு, அதற்கான பணத்தை நேரடியாக வங்கிக் கணக்கில் செலுத்தும். விண்ணப்பம், கையொப்பம் என்பவை தேவையில்லை. இந்த ஸ்மார்ட் ஏடிஎம் மூன்று கிராம் மற்றும் அதற்கு மேற்பட்ட 50% தூய்மை தங்கங்களை ஏற்கும். ஒருவருக்கு அரை மணி நேரத்தில் ரூ. 4.2 லட்சம் வரை பெற்ற நிகழ்வு பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
ஷாங்காய் வணிக வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள இந்த ஏ.டி.எம்.,மில் தங்கள் தங்கத்தை விற்று பணம்பெற நீண்ட வரிசையில் மக்கள் காத்திருக்கின்றனர். தினசரி தங்கம் விலையை ஏ.டி.எம்., திரையில் அறிவிப்பதாகவும், தங்கத்தை விற்றால் எங்கு கூடுதல் பணம் கிடைக்கும் என்று மக்கள் அலையாமல், அன்றைய விலையில் தங்கத்தை இந்த ஏ.டி.எம்.,மில் வைத்து, தங்கள் வங்கிக் கணக்கில் உடனடியாக பணத்தைப் பெறலாம் என்றும் சைனா கோல்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.