ஜம்முவில் இருந்து ஸ்ரீநகருக்கு கடந்த பிப்.14ம் தேதி மாலை துணை ராணுவப்படையினர் 2,500 பேர் 90க்கும் மேற்பட்ட பேருந்தில் சென்றனர். புல்வாமா மாவட்டம் அவந்திபோரா நெடுஞ்சாலையில் பேருந்து வந்த போது 5-வது வரிசையில் சென்றுகொண்டிருந்த பேருந்து மீது வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட காரை மோதச் செய்து ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பின் தீவிரவாதி தற்கொலைப்படைத் தாக்குதல் நடத்தினான். இதில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டனர். 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
தமிழகத்தைச் சேர்ந்த சிவச்சந்திரன், சுப்ரமணியன் ஆகிய இரு வீரர்களும் இந்த தாக்குதலில் பலியானார்கள். இவர்களது உடல், நேற்று அவர்களின் சொந்த ஊரில், ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. தீவிரவாதிகளின் இந்தத் தாக்குதல் தேசம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், உயிர்த்தியாகம் செய்துள்ள குடும்பங்கள் விரைவாக நிதியுதவி பெறும் விதமாக, சிஆர்பிஎஃப் மனைவிகள் சங்கம், பிரபல ஆன்லைன் வர்த்தக நிறுவனமான பேடிஎம்முடன் ஒன்றிணைந்துள்ளது. இதன் மூலம், பேடிஎம் வாயிலாக நிதியளிக்க விரும்புவோர் பணத்தை விரைவாகவும், பாதுகாப்பாகவும் அனுப்பலாம். பேடிஎம் தளத்தில் உள்ள 'Donation' பிரிவில் “CRPF Wives Welfare Association' மூலம் விருப்பமுள்ளவர்கள் நிதியளிக்கலாம். பேடிஎம் மொபைல் ஆப் வாயிலாக பணம் செலுத்த விருபுவோர்,“CRPF Bravehearts” லிங்கை க்ளிக் செய்து,Wives Welfare Association மூலம் நிதி அனுப்பலாம். இந்த திட்டம் மார்ச் 10, 2019 வரை நடைமுறையில் இருக்கும்.
பேடிஎம் மூலம் நிதியளிக்க விருப்பமுள்ளவர்கள், தங்கள் பெயர் மற்றும் பான் எண்ணை குறிப்பிட்டு பணம் செலுத்த வேண்டும். டெபிட், கிரெடிட், யுபிஐ, பேடிஎம் போஸ்ட் பெய்ட், நெட் பேங்கிங், BHIM UPI ஆகியவற்றின் மூலம் நீங்கள் பரிவர்த்தனை செய்யலாம்.