திண்டிவனம் சிப்காட் பூங்காவில் டாபர் நிறுவனம் தனது தொழிற்சாலை அமைப்பதற்கான அனுமதியை, சுற்றுச்சூழல் ஆணையம் வழங்கியுள்ளது.
இந்திய அளவில் மிகப்பெரிய அளவிலான பொருளாதார மாநிலமாக தமிழ்நாடு உருவெடுத்த நிலையில், இதன் பொருளாதாரத்தை ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதாரமாக உயர்த்தும் நோக்கத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார்.
அதனடிப்படையில், திண்டிவனம் சிப்காட் உணவு பூங்காவில் ரூ. 400 கோடி முதலீட்டில் உற்பத்தி ஆலையை, டாபர் நிறுவனம் தொடங்கவுள்ளது. இதனால், சுமார் 250 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இந்த தொழிற்சாலை 1.36 லட்சம் சதுர அடி பரப்பளவில் நிறுவப்படவுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான சுற்றுச்சூழல் அனுமதியை, தாக்க மதிப்பீட்டு ஆணையம் அளித்துள்ளது. முன்னதாக இந்த நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட்டது குறிப்பிடத்தக்கது.
டூத் பேஸ்ட், தேன், எண்ணெய்கள் போன்ற பல்வேறு பொருட்களை இந்த நிறுவனம் உற்பத்தி செய்து வருகிறது. இதனால், இங்கு அமைக்கப்படவுள்ள தொழிற்சாலை மூலமாக இதன் உற்பத்தி மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.