பிட்காயின் உள்ளிட்ட, கிரிப்டோ கரன்ஸிகள் கடந்த ஒரு நாளில் மட்டும் 10 சதவீதத்துக்கும் வீழ்ச்சி கண்டுள்ளன.
இந்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, தனது பட்ஜெட் உரையில், கிரிப்டோ கரன்ஸி எனும் டிஜிட்டல் நாணய வணிகத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்தார். இது, இந்திய கிரிப்டோ கரன்ஸி முதலீட்டாளர்களை கலக்கம் அடையச் செய்துள்ளது. பிட்காயின் போலவே, ரிப்பிள் என்ற பெயரில் வணிகம் நடக்கும் மற்றொரு டிஜிட்டல் நாணயமும் நேற்று 10 சதவீதம் சரிந்தது.
பங்கு வணிகம் நடைபெறுவது போலவே, டிஜிட்டல் நாணய சந்தையும், தற்போது உலக அளவில் பிரபலமாகி வருகிறது. முன் எப்போதும் இலலாத அளவு கடந்த ஆண்டில், இந்த சந்தையில் கடல் அலையென முதலீட்டாளர்கள் அதிகரித்தனர். இந்தியாவிலும் இந்த முதலீடு கடந்த ஓராண்டில் கணிசமாக அதிகரித்துள்ளது. கிரிப்டோ நாணய சந்தையில் பிட்காயின் என்ற நாணயம்தான் பிரபலமானது கிட்டத்தட்ட 34 சதவீதம் வரை இதன் பங்கு உள்ளது.
கடந்த டிசம்பர் மாதத்தில் 1 பிட்காயின் 20 ஆயிரம் அமெரிக்க டாலர் என்ற மதிப்புக்கு உயர்ந்தது. ஆனால், தற்போது அதன் மதிப்பு, 9 ஆயிரத்தை ஒட்டி இறங்கியுள்ளது. ரிப்பிள் என்ற கிரிப்டோ நாணயமும் கடந்த ஒரு நாளில் 10 சதவீதத்துக்கும் மேல் இறக்கம் கண்டுள்ளது. இந்தியாவில் மட்டுமின்றி மற்ற சில ஆசிய நாடுகளிலும் இதற்கு எதிராக அரசு தரப்பில் இருந்து கருத்துகள் வெளியாகி வருவதால், இந்த சரிவு தொடர்ந்து வருகிறது.
தீவிரவாதிகள் உள்ளிட்ட, சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் பலர் இந்த வணிகத்தில் உள்ளதாகச் சொல்லப்படுகிறது. அரசு தரப்பில் இருந்து மட்டுமின்றி, பேஸ்புக் உள்ளிட்ட சில நிறுவனங்களும், இந்த கிரிப்டோ கரன்ஸி வணிகத்துக்கு துணை நிற்க மறுப்பதால், கிரிப்டோ கரன்ஸிகளின் எதிர்காலம் கேள்விக் குறியாகி வருகிறது.