கலாநிதி மாறனுக்கு சொந்தமான சன் டிவியின் பங்குகள் 14%க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. தேர்தல் முடிவுகள் வர இருக்கின்ற நிலையில் இந்த பங்கு உயர்வு நடைபெற்றுள்ளது. கடந்த வாரம் ரூ. 458க்கு இருந்த இதன் பங்குகள் ரூ. 523 என்ற உச்ச வரம்பை வியாழக்கிழமை எட்டியது. அன்றைய பங்கு சந்தை முடிவின் போது ரூ. 519.30 விலையில் நிறைவுற்றது. இது முந்தைய நாளின் முடிவில் இருந்து மூன்று சதவீதம் அதிகமானது.
தேர்தல் முடிவுகள் மே 2ம் தேதி அன்று வெளியாக உள்ள நிலையில் இந்த மாற்றங்கள் இருக்கும் என்று ஏற்கனவே பங்கு வர்த்தக நிபுணர்கள் கூறியிருந்தனர். தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் நேற்று வெளியாகிய நிலையில் திமுக மீண்டும் அரசு அமைக்கும் என்று கூறப்பட்டிருந்தது. திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தொலைக்காட்சி விளம்பரங்கள் மற்றும் கேபிள் தொழில் காரணமாக சன் டிவி லாபம் அடையும் என்றும் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
இருப்பினும் 2016ம் ஆண்டு தேர்தல் முடிவு அறிவிப்பின் போதும் இவ்வாறு பங்குகளின் விலை உயார்ந்தது. ஆனாலும் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சி அமைத்தது குறிப்பிடத்தக்கது. திமுக ஆட்சிக்கு வந்தாலும் வரும் நாட்களில் அதன் பங்குகளில் பெரிய உயர்வு இருக்காது என்றும் சென்னையை சேர்ந்த பங்கு வர்த்தக நிபுணர் ஒருவர் கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil