சேமிப்பு மற்றும் முதலீடு குறித்தான ஆர்வமும் திட்டமிடலும் நம்மில் பலருக்கும் இருக்கும். நம் முதலீடு மற்றும் சேமிப்பு குறித்தான திட்டங்களை புத்திசாலித் தனமாக மேற்கொண்டோம் என்றால் நீண்ட நாளுக்கான பயனை அறுவடை செய்யலாம்.
கே.வி.பி என்று அழைக்கப்படும் ‘கிஷான் விகாஷ் பத்ரா’ எனும் திட்டம் தபால் அலுவலகங்கள் வழங்கும் சேமிப்புத் திட்டங்களில் சிறந்த ஒன்றாகும். தற்போது, இத்திட்டத்தில் உங்கள் முதலீடுகளுக்கு ஆண்டு தோறும் 6.9% வட்டியை வழங்குகிறது தபால் வங்கி. இத்திட்டத்தால் தற்போதைய வட்டி விகிதத்தின் படி, உங்கள் முதலீட்டு காலமானது 10 வருடங்களாக இருக்கும் போது, உங்கள் முதலீட்டுதொகை இரட்டிப்பாக முதிர்வு கால பயனாக கிடைக்கும்.
இந்நிலையில், பெரும்பாலான வங்கிகளில் பிக்ஸட் டெபாசிட்டுகளுக்கு 6 சதவீதத்துக்கும் குறைவாகவே வட்டி வழங்கப்படுகிறது. ஆனால், கிஷான் விகாஷ் பத்ரா திட்டத்தில் வழங்கப்படும் வட்டி வீதமானது முதலீட்டாளர்களை கவர்ந்துள்ளது.
நாட்டில் உள்ள அனைத்து தபால் நிலையங்களிலும், இத்திட்டத்தில் பயனடைய கணக்கினை தொடங்கலாம். முதலில், 1000 ரூபாயை சேமிப்பாக செலுத்த வேண்டும். பின், 100-ன் மடங்குகளில் உங்களின் முதலீடுகளை மேற்கொள்ளலாம். இத்திட்டத்திற்கான அதிக முதலீட்டு வரம்பு என்பது கிடையாது.
18 வயது நிரம்பிய அனைவரும் இத்திட்டத்தில் இணையலாம். மூன்று நபர்கள் ஒன்றிணைந்து , ஒருங்கிணைந்த கணக்காகவும் பராமரித்துக் கொள்ளலாம். 10 வயது பூர்த்தியடையாதவர்கள் அல்லது மனநல பாதிப்புக்குள்ளானவர்கள் பெயரில் கணக்கை தொடங்க வேண்டும் என்றால், பாதுகாவலராக ஒருவரை நியமித்து கணக்கினை பராமரிக்கலாம். 10 வயதிற்கு மேற்பட்டோர் சொந்தமாக தங்கள் பெயரிலேயே கணக்கினை தொடங்கிக் கொள்ளலாம்.
கிஷான் விகாஷ் பத்ரா கணக்கினை முதிர்வு காலத்திற்கு முன்பே முறித்துக் கொள்ளும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், அது சில நிபந்தனைகளுக்கு உட்பட்டதாக இருக்கிறது. தனிநபர் கணக்கினை பராமரித்தால் அல்லது கூட்டு கணக்கில் அனைவரும் சம்மதம் தெரிவித்தால் கணக்கினை முறித்துக் கொள்ளலாம். மேலும், நீதிமன்றம் உத்தரவிடும் சூழலில் கணக்கினை முதிர்வு காலத்துக்கு முன்னரே முறித்துக் கொள்ளலாம்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil