scorecardresearch

எலான் மஸ்க்-ஐ போட்டி போட்டு வரவேற்கும் மாநிலங்கள்: தமிழகத்தில் இருந்தும் அழைப்பு

எலான் மஸ்கின் டெஸ்லா நிறுவனம் அதிநவீன எலக்ட்ரிக் கார்கள் உற்பத்தியில் உலகளவில் முன்னிலையில் உள்ளது. தமிழகத்தில் எலான் மஸ்க் டெஸ்லா தொழில்சாலையை தொடங்கிட மன்னார்குடி சட்டமன்ற தொகுதி திமுக உறுப்பினர் டிஆர்பி ராஜா ட்விட்டரில் கோரிக்கை விடுத்துள்ளார்.

Elon musk controversial speeches

உலகிலேயே மிகப்பெரிய கோடீஸ்வரரும், ஸ்பேஸ்எக்ஸ் மற்றும் டெஸ்ஸா நிறுவனத்தின் அதிபருமான எலான் மஸ்க், உலகிலேயே மிகவும் அதிநவீன எலக்ட்ரிக் காராக விளங்கும் டெஸ்லா கார்கள் இந்தியாவுக்கு விற்பனைக்குக் கொண்டு வர பல மாதங்களாக முயற்சி செய்து வருகிறார். இருப்பனும், மத்திய அரசு எலான் மஸ்க்-ன் வரிக் குறைப்பு கோரிக்கையை ஏற்காமல் இருப்பதால் தாமதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது

அண்மையில், ட்விட்டரில் பிரனாய் பத்தோல் என்பவர் எலான் மஸ்க்-ஐ டேக் செய்து, “இந்தியாவில் எப்போது டெஸ்லா கார்கள் அறிமுகம் செய்யப்படும்?” என கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த எலான் மஸ்க், இந்தியாவில் டெஸ்லா கார்களை அறிமுகம் செய்வதற்காகத் தொடர்ந்து பணியாற்றி வருகிறோம், அரசுடன் அதிகப்படியான சவால்களை எதிர்கொண்டு வருகிறோம் எனத் தெரிவித்தார்.

எலான் மஸ்கின் ரிப்ளை பல மாநிலங்களில் உள்ள அமைச்சர்களின் கண்களில் சிக்கியது. முதல் நபராக, எலான் மிஸ்க்குக்கு பதிலளித்த தெலுங்கானா அமைச்சர் கே.டீ ராமாராவ், “நான் இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தின் தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர்.

தெலுங்கானா மாநிலத்தில் டெஸ்லா தொழிற்சாலை அமைக்க முழு ஒத்துழைப்பு தருவதாகவும் தெலங்கானா மாநிலம் தொழிற்துறை நிறுவனங்களுக்கும், புதிய தொழிற்சாலை அமைக்கவும் சிறந்த இடம். டெஸ்லா நிறுவனத்தைத் தெலங்கானாவில் தொடங்க டெஸ்லா நிறுவனத்துடன் இணைந்து வேலை செய்யத் தயாராக இருப்பதாக தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து, மகாராஷ்டிராவின் நீர்வளத்துறை அமைச்சரும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ஜெயந்த் பாட்டீல் தனது ட்விட்டர் பக்கத்தில், “டெஸ்லா கார் உற்பத்தித் தொழிற்சாலையை இந்தியாவில் அமைக்க மகாராஷ்டிரா மாநில அரசு தேவையான உதவிகளை வழங்கும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், மன்னார்குடி சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ டிஆர்பி ராஜா எலான் மஸ்கின் பதிவை ரீட்வீட் செய்துள்ளார்.

அதில், இந்தியாவின் டெட்ராய்ட் ஆன தமிழகத்திற்கு உங்களை வரவேற்கிறோம். தமிழகத்தில் தொழிற்சாலை அமைப்பது தங்களுக்கு தென்றலைப் போல இருக்கும். எங்கள் திறமையான இளைஞர்கள் நீங்கள் வேலையில் கவனம் செலுத்தும்போது அனைத்து சவால்களையும் உங்களுக்கு சமாளிக்க உதவுவார்கள். ஒரு சிறந்த உலகத்தை ஒன்றாக நாம் உருவாக்குவோம்” என குறிப்பிட்டிருந்தார்.

எலான் மஸ்க்கை போட்டிபோட்டு பல மாநிலங்கள் அழைத்து வரும் நிலையில், டிஆர்பி ராஜாவின் ட்வீட் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தற்போது, எலன் மாஸ்க்கின் டெஸ்லா நிறுவன கிளையை தமிழகத்தில் தொடங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கும் விதமாக, தமிழக தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ட்விட்டர் மூலம் அழைப்பு விடுத்துள்ளார்.

இது குறித்து தங்கம் தென்னரசு தனது ட்விட்டர் பக்கத்தில், வணக்கம் திரு எலன் மாஸ்க், நான் தமிழ்நாட்டைச் சேர்ந்தவன். எலக்ட்ரிக் வாகனங்களுக்கான மொத்த திட்டமிடப்பட்ட முதலீட்டில் தமிழ்நாடு 34% பங்கு வகிக்கிறது. இந்தியாவின் எலக்ட்ரிக் வாகன (EV) தலைநகருக்கு வரவேற்கிறோம். மேலும், உலகின் முதல் ஒன்பது புதுப்பிக்கத்தக்க எரிசக்தி சந்தைகளில் தமிழ்நாடும் ஒன்றாகும் என்று பதிவிட்டுள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Business news download Indian Express Tamil App.

Web Title: Elon musk twitter conversation with indian politicians

Best of Express