/indian-express-tamil/media/media_files/2025/05/23/XIxRWfGkMUY6ACWRvPeT.jpg)
சென்னையைச் சேர்ந்த ஓய்வுபெற்ற பொறியாளர் ஸ்ரீராம் ராஜகோபாலன், எமிரேட்ஸ் டிராவின் ரூ. 230 கோடி ஜாக்பாட்டை வென்றுள்ளார் என அந்த லாட்டரி நிறுவனம் நேற்று (மே 22) அறிவித்தது. மெகா7 என்ற இந்த விளையாட்டில் ஏழு எண்களையும் சரியாக பொருத்தி, இந்த டிராவின் வரலாற்றில் மிகப்பெரிய பரிசை ஸ்ரீராம் தட்டிச் சென்றுள்ளார்.
டைகெரோஸுக்குச் சொந்தமான எமிரேட்ஸ் டிரா, ஐக்கிய அரபு அமீரகத்தின் வணிக லாட்டரி ஒழுங்குமுறை ஆணையத்தின் (GCGRA) ஒழுங்குமுறை புதுப்பித்தல்களைத் தொடர்ந்து, 2023 ஆம் ஆண்டின் இறுதியில் தனது செயல்பாடுகளை நிறுத்தியது. அதன்பின்னர், நிறுவனம் தனது கவனத்தை சர்வதேச சந்தைகளுக்கு மாற்றியது.
இந்நிறுவனத்தின் கூற்றுப்படி, மார்ச் 16 அன்று வெற்றி எண்களை ஸ்ரீராம் சரியாக பொருத்தியுள்ளார். அவர் தனது செல்போனில் ஸ்டைலஸைப் பயன்படுத்தி, கண்களை மூடிக்கொண்டு "சாதாரணமாக எண்களைத் தட்டினார்" என்று பத்திரிகை செய்தியில் எமிரேட்ஸ் டிரா தெரிவித்துள்ளது.
"முதலில் என்னால் இதை நம்ப முடியவில்லை. நான் டிரா வீடியோவை மீண்டும் போட்டுப் பார்த்தேன். வெற்றி பெற்ற எண்களின் ஸ்கிரீன்ஷாட்டையும் எடுத்தேன்" என்று அவர் கூறியுள்ளார்.
எளிமையான, நடுத்தரக் குடும்பத்தில் வளர்ந்த ஸ்ரீராம், 1998 இல் சவுதி அரேபியாவிற்கு குடிபெயர்ந்தார். அங்கே தனது மனைவி மற்றும் இரண்டு மகன்களுடன் ஒரு வாழ்க்கையை அமைத்துக் கொண்டு, 2023 இல் ஓய்வுபெற்ற பிறகு சென்னைக்குத் திரும்பினார்.
லாட்டரி விளையாடுவதில் இருந்து இடைவெளி எடுத்திருந்த அவர், மீண்டும் தனது அதிர்ஷ்டத்தை சோதிக்க முடிவு செய்தார். வெற்றி பெற்ற தருணத்தை ஸ்ரீராம் "70 சதவீதம் மகிழ்ச்சி, 30 சதவீதம் பயம்" என்று விவரித்தார்.
"இது ஒரு பெரிய தொகை. நான் இதற்கு முன் இப்படி எதையும் நிர்வகித்ததில்லை... இந்த வெற்றி எனக்கு மட்டுமல்ல; இது என் குடும்பத்திற்கும், என் குழந்தைகளுக்கும், இதைப் படிக்கும் அனைவருக்கும் ஒரு நம்பிக்கை அளிக்கும். ஒவ்வொரு தந்தையும் தங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தைப் பாதுகாக்க கனவு காண்கிறார்கள். இது தலைமுறைக்கான செல்வத்தை உருவாக்கும் ஒரு வாய்ப்பு" என்று அவர் கூறியுள்ளார்.
பணத்திற்கான குறிப்பிட்ட திட்டங்களை அவர் இன்னும் தெரிவிக்கவில்லை என்றாலும், ஒரு பகுதியை தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடையாக வழங்கத் திட்டமிட்டுள்ளதாகக் கூறினார். "நான் ஒரு சாதாரண ஊழியராக இருந்தபோது ஒப்பிடுகையில் இப்போது பெரிய முடிவுகளை எடுக்க வேண்டியுள்ளது. இது என் வாழ்க்கையை மாற்றலாம், ஆனால் நான் யார் என்பதை மாற்றாது" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.