EPFO Alert : உங்களின் வருமானத்தில் இருந்து பிடிக்கப்படும் பி.எஃப். என்பது கிட்டத்தட்ட ஓய்வுகால தேவைக்கு பயன்படுத்தப்பட வேண்டிய தொகை தான். அதனால் தான் பலரும் அதனை ரிட்டயர்மென்ட் ஃப்ண்ட் என்று அழைக்கின்றனர்.
பல இக்கட்டான சூழலில் நம்மிடம் வங்கி கணக்கில் சேமிப்பு இல்லாத காலத்தில் நம்முடைய பி.எஃப். கணக்கில் இருந்து பணத்தை எடுத்து செலவழித்துவிடுகின்றோம். உங்களுக்கு தெரியுமா கொரோனா காலத்தில் இந்தியா முழுவதும் கிட்டதட்ட 70 லட்சம் நபர்கள் தங்களின் பி.எஃப். கணக்கை மூடிவிட்டனர்.
மிகவும் இக்கட்டான சூழலில் மட்டுமே உங்களின் பி.எஃப். கணக்கில் இருந்து பணத்தை எடுக்க வேண்டும் என்றும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இப்போது உங்களுக்கு 30 வயது ஆகின்றது என்று வைத்துக் கொள்வோம். உங்கள் ஓய்வுக்கு இன்னும் 30 வருடங்கள் உள்ளன. நீங்கள் ஒரு அவசர தேவைக்காக ரூ. 1 லட்சத்தை உங்களின் பி.எஃப். கணக்கில் இருந்து எடுத்துவிட்டால் கிட்டத்தட்ட 11.55 லட்சம் ரூபாய் அளவில் உங்களின் சேமிப்பை கரைத்துவிட்டதாக அர்த்தம். இந்தியாவில் மற்ற அனைத்து சேமிப்பு திட்டங்களைக் காட்டிலும் இந்த திட்டம் உங்களுக்கு 8.5% வட்டியை வழங்குகிறது.
சம்பளத்தில் 12 சதவீதம் ஒவ்வொரு மாதமும் PF கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. இ.பி.எஃப். கணக்கில் இரண்டு வகையாக பணம் பிரித்து வைக்கப்படுகிறது. முதல் பாதி பி.எஃபி. இரண்டாம் பாதி ஓய்வூதியம். ஓய்வூதியத்தில் 8.33% நிறுவனத்தின் பங்காக இருக்கும். அதிகபட்சமாக ரூ. 1250 வரை தற்போது வழங்கப்பட்டு வருகிறது. EPFO விதிகள் ஓய்வூதியத்திற்கு முன்பே EPF பணத்தை திரும்பப் பெறலாம் என்று கூறுகின்றன. இருப்பினும், அதன் சில நிபந்தனைகளின் அடிப்படையிலேயே பணம் எடுக்க முடியும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil