scorecardresearch

ஓய்வு பெற்ற உடனே ஓய்வூதியம்; தனியார் துறை ஊழியர்களுக்கு EPFO குட் நியூஸ்

தனியார் துறை ஊழியர்கள் ஓய்வு பெற்ற உடனே ஓய்வூதியம் பெறும் வகையில் EPFOவின் புதிய திட்டம் அறிமுகம்

Pension status on EPFO website

EPFO introduce new retirement plan for private sector: தனியார் துறை ஊழியர்களுக்கு ஓய்வு பெற்ற உடனே ஓய்வூதியம் வழங்கும் வகையில் EPFO நிறுவனம் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

EPFO நிறுவனம், லூதியானாவில் விஸ்வாஸ் என்ற பெயரில் ஒரு முன்னோடி திட்டத்தை தொடங்கியுள்ளது. இதன்படி, தனியார் துறை ஊழியர்கள் ஓய்வு பெற்ற உடனேயே ஓய்வூதியம் பெறத் தொடங்குவார்கள். EPFO அலுவலகம் அதற்கான ஏற்பாடுகளை முன்கூட்டியே செய்யும்.

தனியார் துறை ஊழியர்களின் சிரமங்களைக் குறைக்கும் நோக்கில் மத்திய அரசு வேகமாகச் செயல்பட்டு வருகிறது. தனியார் நிறுவனங்கள் மற்றும் நிறுவனங்களின் ஊழியர்களும் இனி வரும் காலங்களில் அரசு ஊழியர்களைப் போல் ஓய்வு பெறும் நாளில் இருந்து ஓய்வூதியம் பெறுவார்கள். இதற்காக, ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (இபிஎஃப்ஓ) வெள்ளிக்கிழமை லூதியானாவில் ‘விஸ்வாஸ்’ என்ற முன்னோடித் திட்டத்தைத் தொடங்கியுள்ளது.

இத்திட்டத்தின் கீழ், லூதியானாவில் அமைந்துள்ள மண்டல அலுவலகத்தில் சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு ஊழியர்களின் ஆவணங்களை ஓய்வு பெறுவதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பே பூர்த்தி செய்யும், இதன் காரணமாக அவர்களுக்கு ஓய்வு பெறும்போது ஓய்வூதிய சான்றிதழ் வழங்கப்படும்.

முதற்கட்டமாக, 54 நிறுவனங்களைச் சேர்ந்த 91 ஊழியர்களுக்கு ஓய்வூதிய சான்றிதழ் வழங்கப்பட்டது. இவர்களில், ஏழு பேர் ஒத்திவைக்கப்பட்ட ஓய்வூதிய விருப்பத்தையும், 84 பேர் ஓய்வூதியத்தையும் தேர்வு செய்துள்ளனர். இந்த திட்டம் வெற்றி பெற்ற பிறகு மற்ற மாநிலங்களிலும் தொடங்கப்படும் என EPFO அறிவித்துள்ளது.

இதையும் படியுங்கள்: வட்டி விகிதங்களை மாற்றிய முக்கிய வங்கி; விவரங்கள் இதோ…

இதுகுறித்து, EPFO இன் கூடுதல் மத்திய ஆணையர் (ACC) குமார் ரோஹித் கூறுகையில், ”ஓய்வு பெறும் மாதத்திற்கான வருங்கால வைப்பு நிதியை (PF) நிறுவனங்கள் முன்கூட்டியே செலுத்த வேண்டும். ஓய்வூதிய கோரிக்கைகளை தேவையான ஆவணங்களுடன் PF அலுவலகத்தில் தாக்கல் செய்ய வேண்டும். மாதம் 15 ஆம் தேதிக்கு முன் ஓய்வு பெறும் ஊழியர்கள் ECR (எலக்ட்ரானிக் சலான் கம் ரிட்டர்ன்) தாக்கல் செய்ய வேண்டும்” என்று கூறினார்.

மேலும், ”இந்த திட்டம் முதன்முறையாக EPFOவில் செய்யப்படுகிறது, எனவே நடைமுறைச் சிக்கல்களைப் புரிந்துகொள்ள லூதியானாவில் முதன்மையாக திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. அதன் பிறகு மற்ற இடங்களில் தொடங்கப்படும்” என்றும் குமார் ரோஹித் கூறினார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Business news download Indian Express Tamil App.

Web Title: Epfo introduce new retirement plan for private sector