/indian-express-tamil/media/media_files/2025/08/31/epfo-payment-2025-08-31-13-17-16.jpg)
பி.எஃப். தொகையில் இனி 100% எடுக்கலாம்: விதிகள் தளர்த்தப்பட்டு புதிய மாற்றங்கள் அமல்!
டெல்லியில் நடைபெற்ற இ.பி.எஃப்.ஓ-வின் மத்திய அறங்காவலர் குழுவின் (CBT) 238-வது கூட்டத்தில், ஊழியர்களின் 'வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும்' ('ease of living') நோக்கத்துடன் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. இந்தக் கூட்டத்திற்கு மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தலைமை தாங்கினார்.
மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை இணை அமைச்சர் ஷோபா கரந்தலஜே, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் செயலாளர் வந்தனா குர்நானி, மற்றும் மத்திய வருங்கால வைப்பு நிதி ஆணையர் ரமேஷ் கிருஷ்ணமூர்த்தி ஆகியோரும் இதில் கலந்து கொண்டனர்.
100% பி.எஃப். தொகையை முழுமையாக எடுக்க அனுமதி
மத்திய அறங்காவலர் குழுவின் கூட்டத்தில் எடுக்கப்பட்ட மிக முக்கியமான முடிவுகளில் ஒன்று. உறுப்பினர்கள் தங்கள் வருங்கால வைப்பு நிதி (PF) கணக்கில் உள்ள ஊழியர் மற்றும் முதலாளியின் பங்குகள் உட்பட, தகுதியான நிலுவைத் தொகையில் 100% வரை திரும்பப் பெற அனுமதிக்கப்படுவார்கள்.
பி.எஃப். திரும்பப் பெறுதல் (Full Withdrawal) விதிகள்
பழைய விதி: முழுமையான பி.எஃப். தொகையை முன்பு ஓய்வு அல்லது வேலையின்மை காரணமாக மட்டுமே எடுக்க அனுமதிக்கப்பட்டது. வேலையின்மை ஏற்பட்டால், ஒரு மாதம் கழித்து 75% பி.எஃப். தொகையையும், 2 மாதங்கள் கழித்து மீதமுள்ள 25% தொகையையும் எடுக்கலாம். ஓய்வூதியத்தின்போது முழுத் தொகையையும் வரம்பின்றி எடுக்க அனுமதிக்கப்பட்டது.
புதிய விதி: இப்போது, 100% வரை பி.எஃப். தொகையைத் திரும்பப் பெற அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேற்கண்ட 100% விதி அனைத்துப் பிரிவினருக்கும் முழுமையாகச் செயல்படும் விதம் குறித்த மேலும் தெளிவான வழிகாட்டுதல்கள் எதிர்பார்க்கப்படுகிறது.
பகுதியளவு பி.எஃப். தொகையைத் திரும்பப் பெறுதலில் மாற்றங்கள்
90% அதிகபட்ச வரம்பு நீக்கம்: நிலம் வாங்குதல், புதிய வீடு வாங்குதல், கட்டுதல், EMI திருப்பிச் செலுத்துதல் போன்ற தேவைகளுக்காக, இபிஎஃப் உறுப்பினர்கள் தங்கள் இருப்பில் இருந்து அதிகபட்சமாக 90% வரை மட்டுமே பகுதியளவு தொகையை எடுக்க அனுமதிக்கப்பட்டனர். இந்த வரம்புகளும் தளர்த்தப்பட்டுள்ளன.
சிக்கலான 13 விதிகள் நீக்கப்பட்டு எளிமைப்படுத்தல்:
இ.பி.எஃப் உறுப்பினர்களின் 'வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும்' வகையில், பகுதியளவு பி.எஃப். திரும்பப் பெறும் திட்டத்தில் இருந்த சிக்கலான 13 விதிகள் நீக்கப்பட்டு, மூன்றே பிரிவுகளின் கீழ் எளிமையாக்கப்பட்டன. அத்தியாவசியத் தேவைகள் (நோய், கல்வி, திருமணம்), வீட்டுத் தேவைகள், சிறப்புச் சூழ்நிலைகள், வரம்புகள் தளர்த்தப்பட்டன
கல்விக்காகத் திரும்பப் பெறும் வரம்பு 10 மடங்கு வரையிலும், திருமணத்திற்காக 5 மடங்கு வரையிலும் உயர்த்தப்பட்டுள்ளது (முன்பு கல்வி மற்றும் திருமணம் ஆகிய இரண்டுக்கும் சேர்த்து மொத்தம் 3 முறை மட்டுமே எடுக்க முடியும் என்ற வரம்பு இருந்தது). அனைத்து விதமான பகுதி அளவு தொகையைத் திரும்பப் பெறுவதற்கும் தேவையான குறைந்தபட்ச சேவை காலம், 12 மாதங்களாக ஒரே சீராகக் குறைக்கப்பட்டுள்ளது.
சிறப்புச் சூழ்நிலைகளுக்குக் காரணம் சொல்லத் தேவையில்லை:
முன்பு, 'சிறப்புச் சூழ்நிலைகள்' என்ற பிரிவின் கீழ், இயற்கைச் சீரழிவு, நிறுவனங்களின் பூட்டு/மூடுதல், தொடர்ச்சியான வேலையின்மை, தொற்றுநோய் பரவல் போன்றவற்றுக்காகப் பகுதியளவு தொகையை எடுக்க உறுப்பினர் அதற்கான காரணத்தைத் தெளிவுபடுத்த வேண்டி இருந்தது. இதனால் கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டு, குறைகள் எழுந்தன. இப்போது, இந்த வகையின் கீழ் உறுப்பினர்கள் எந்தக் காரணத்தையும் குறிப்பிடாமல் விண்ணப்பிக்கலாம்.
25% குறைந்தபட்ச இருப்பை எப்போதும் பராமரிக்க வேண்டும்
உறுப்பினர்களின் கணக்கில் உள்ள தொகையில் 25% தொகையை 'குறைந்தபட்ச இருப்பு' (Minimum Balance) ஆக எப்போதும் பராமரிக்க ஒரு புதிய விதி உருவாக்கப்பட்டுள்ளது என்று தொழிலாளர் அமைச்சகம் கூட்டத்திற்குப் பிறகு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. "இந்த 25% இருப்பு, உறுப்பினர்கள் இ.பி.எஃப்.ஓ வழங்கும் அதிக வட்டி விகிதத்தையும் (தற்போது ஆண்டுக்கு 8.25%) கூட்டு பலன்களையும் (Compounding Benefits) அனுபவிக்க உதவும். இதன் மூலம் அதிக மதிப்புள்ள ஓய்வூதியத் தொகையைக் குவிக்க முடியும். இந்த மாற்றம், தொகையை எடுப்பதற்கான அணுகலை எளிதாக்குவதோடு, உறுப்பினர்கள் போதுமான ஓய்வூதியத் தொகையைப் பராமரிப்பதையும் உறுதி செய்கிறது," என்று அந்த வெளியீடு கூறியுள்ளது.
பகுதியளவு தொகையை எடுக்கும் செயல்முறையில் அதிக நெகிழ்வுத்தன்மை இருக்கும். "ஆவணங்கள் தேவையில்லை" என்ற இந்த விதி, பகுதியளவு தொகையைத் திரும்பப் பெறுவதற்கான கோரிக்கைகளுக்கு 100% தானியங்கித் தீர்வுக்கு வழி வகுக்கும் என்றும், இது வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் என்றும் அந்த அறிக்கை கூறியது.
மேற்கூறியவற்றுக்கு இணங்க, இபிஎஃப்-இன் முன்கூட்டிய இறுதித் தீர்வுக்கான கால வரம்பை தற்போதுள்ள 2 மாதங்களிலிருந்து 12 மாதங்களாக மற்றும் இறுதி ஓய்வூதியத் திரும்பப் பெறுதலுக்கான கால வரம்பை 2 மாதங்களிலிருந்து 36 மாதங்களாகவும் மாற்றுவதற்கும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தத் தளர்வுகள், உறுப்பினர்கள் தங்கள் ஓய்வூதியச் சேமிப்பு அல்லது ஓய்வூதிய உரிமைகளில் சமரசம் செய்யாமல் உடனடி நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியும் என்பதை உறுதி செய்கின்றன.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.