ஆர்.சந்திரன்
மத்திய அரசின் நிதியமைச்சகம் 9500 நிதி நிறுவனங்களின் பட்டியலை வெளியிட்டு, இவை மிகவும் ஆபத்தானவை என்ற எச்சரிக்கை தகவலையும் வெளியிட்டுள்ளது.
வங்கி சாரா நிதி நிறுவனங்கள் எனச் சொல்லப்படும் இவை, வங்கிகளில் தரப்படுவதைவிட சற்று கூடுதலாக வட்டி தரும் நிதி நிறுவனங்கள். இந்திய ரிசர்வ் வங்கியின் பல்வேறு கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு செயல்பட வேண்டிய இவ்வகை நிறுவனங்கள், நாடு முழுவதும் உள்ள மக்களிடம் இருந்து பணத்தை டெப்பாசிட்டாக பெறுகின்றன. இவ்விதம் கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் மாதம் பண மதிப்பு நீக்க அறிவிப்பை பிரதமர் வெளியிட்ட பின், பொதுமக்களிடமிருந்து ரொக்கமாக பணத்தைப் பெற்றுக் கொண்டு, அதற்கு பதிலாக, முன் தேதியிட்டு டெப்பாசிட் சான்றிதழ் வழங்கியதாக பல நிறுவனங்களின் மீது குற்றம் சாட்டப்பட்டது. அவற்றை மத்திய நிதியமைச்சகத்தின் கீழ் இயங்கும் நிதித்துறை நுண்ணறிவுப் பிரிவைச் சேர்ந்தவர்கள் அடையாளம் கண்டு விசாரணை நடத்தினர். இதில் பல்வேறு தவறு இழைத்த நிறுவனங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவை கருப்பு பண ஒழிப்புச் சட்டத்தின் கீழ் "மிகவும் ஆபத்தானவை" என தற்போது நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
அதோடு, 2018ம் ஆண்டு ஜனவரி மாத இறுதி நிலவரப்படி, மேற்கண்ட தவறு இழைத்த நிறுவனங்களின் பெயர் கொண்ட ஒரு பட்டியல் தயாராகியுள்ளது. இது சாமானியர்களை எட்ட வேண்டும் என்பதற்காக 143 பக்கம் உள்ள, அந்த நிறுவனங்களின் பெயர் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதை, http://fiuindia.gov.in/pdfs/quicklinks/High%20Risk%20NBFCs%20as%20on%2031.01.2018.pdf என்ற முகவரியில் காணலாம்.
அதோடு, மேற்கண்ட இந்நிறுவனங்கள் தங்களது செயல்பாடு, நடவடிக்கை குறித்த விஷயங்களில் தொடர்பு கொள்வதற்காக (பிரினிசிபல் ஆபிஸர்) முதன்மை அதிகாரி என, ஒருவரை பணியமர்த்த வேண்டும் என்ற விதியையும் மதிக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த நிறுவனங்களுடன் தொடர்பு வைத்துக் கொள்ளாமல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.