Advertisment

வருமான வரி ரிட்டர்ன் தாக்கல் செய்த 24 மணி நேரத்தில் ரீஃபண்ட்!

3 மாத சோதனை முயற்சிக்குப் பிறகு, அடுத்த ஆண்டில் இருந்து நடைமுறைக்கு வரும்

author-image
WebDesk
Jan 18, 2019 16:42 IST
ITR 2019, Income Tax Return 2019, Income Tax Return 2019-20

income tax, income tax news, வருமான வரித்துறை, வருமான வரிச் சலுகை

வருமான வரி ரிட்டர்ன் தாக்கல் செய்த 24 மணி நேரத்தில் பணத்தை பெற்றுக் கொள்ளும் முறை அடுத்த ஆண்டு முதல் நடைமுறைக்கு வர உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

அடுத்த தலைமுறைக்கான வருமான வரி ரிட்டர்ன் தாக்கல் செய்யும் முறைக்கான மென்பொருளை உருவாக்கும் திட்டத்துக்கு பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது.

ரூ.4,241.97 கோடி மதிப்பில் உருவாகும் இந்தத் திட்டத்துக்கு ஒருங்கிணைக்கப்பட்ட இ-பைலிங், சென்ட்ரலைஸ்ட் பிராஸஸிங் சென்டர் என்று திட்டமிடப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின்படி தற்போது வருமான வரி ரிட்டர்ன் தாக்கல் செய்த பின், அதைப் பரிசீலனை செய்து மீண்டும் அவர்களுக்குப் பணத்தை அளிக்கச் சராசரியாக 63 நாட்கள் ஆகும். இந்நிலையில் இந்த புதிய மென்பொருள் மூலம் அந்தப் பணி ஒருநாளில் முடிந்துவிடும். இந்தப் புதிய மென்பொருள் தயாரிக்கும் வேலை இன்போசிஸ் நிறுவனத்திடம் வழங்கப்பட உள்ளது.

இது குறித்து மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் செய்தியாளர்களிடம் கூறுகையில், ''வருமான வரி ரிட்டர்ன் தாக்கலை எளிமைப்படுத்தியும், ரீஃபண்ட் வழங்கும் நாட்களை 63 நாட்களில் இருந்து ஒரு நாளாகக் குறைக்கவும் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. அதற்கான மென்பொருளைத் தயாரிக்க ரூ. 4,242 கோடி ஒதுக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த மென்பொருளை இன்போசிஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அடுத்த 18 மாதங்களில் முடிக்கப்படும் இந்த மென்பொருள் 3 மாத சோதனை முயற்சிக்குப் பிறகு, அடுத்த ஆண்டில் இருந்து நடைமுறைக்கு வரும். இந்த புதிய திட்டம் வருமான வரி செலுத்தும் முறை, இப்போதுள்ள நிலையை மேலும் எளிமையாக்கும். ஏதேனும் தவறுகள் நடந்தால் விரைவாகச் சரி செய்யும்.

ஏற்கெனவே இருக்கும் சிபிசி ஐடிஆர்-1.0 திட்டத்துக்கு நடப்பு ஆண்டில் ரூ.1,482 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டில் ரூ.1.83 லட்சம் கோடி வருமானவரி செலுத்துவோருக்கு ரீஃபண்ட் அளிக்கப்பட்டுள்ளது" என்று பியூஷ் கோயல் தெரிவித்தார்.

இந்தப் புதிய திட்டத்தில் வருமான வரி செலுத்துவோரின் கணக்கில், முன்கூட்டியே பதிவேற்றம் செய்யப்பட்ட வருமான வரி செலுத்தும் படிவம் இருக்கும். அந்தப் படிவத்தில் அவர்களின் பெயர், பான் எண் போன்றவை குறிப்பிடப்பட்டு இருக்கும். அதில் ஊதியம், வட்டி வருவாய் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை மட்டும் வரி செலுத்துவோர் குறிப்பிட்டால் போதுமானதாக இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

மேலும், இந்தப் புதிய திட்டம் நடைமுறைக்கு வந்தால், ரிட்டர்ன் பரிசீலனை செய்வதில் அதிகமான வெளிப்படைத்தன்மை, நம்பகத்தன்மை நிலவும், ரிட்டர்ன்களை விரைவாகப் பரிசீலனை செய்ய முடியும், குறிப்பாக வருமானவரித் துறை அதிகாரிகள் தலையீடு இல்லாமல் விரைவாக ரிட்டர்ன்கள் பரிசீலிக்க முடியும் என்று வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

#Income Tax Department #Income Tax Return Filing
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment