பாதுகாப்பானது மற்றும் ஓய்வூதியத்தில் நல்ல வருமானத்தை வழங்கும் நீண்ட கால முதலீட்டு விருப்பங்களை நீங்கள் தேடுகிறார்களானால், தபால் அலுவலகத் திட்டங்கள் உங்களுக்கான பெஸ்ட் ஆப்ஷன். ஓய்வை நீங்கள் திட்டமிடும் பட்சத்தில், இந்த செய்தி உங்களுக்கானது தான்.
அவ்வப்போது, சிறந்த ஓய்வூதிய திட்டமிடலுக்குப் பயன்பெறும் பல்வேறு முதலீட்டுத் திட்டங்களை இந்தியா போஸ்ட் அறிவிக்கிறது. அத்தகைய ஒரு திட்டம் தான், மாதாந்திர வருமானத் திட்டம் (MIS)ஆகும். இது நீங்கள் ஓய்வு பெற்ற பிறகு மாதாந்திர ஓய்வூதியத்தை வழங்குகிறது.
இதில் முக்கியம்சம் என்னவென்றால், நீங்கள் ஒவ்வொரு மாதமும் முதலீடு செய்ய வேண்டிய தேவையில்லை. நீங்கள் செய்ய வேண்டியது ஒன்று தான், அதில் மொத்த தொகையை முதலில் முதலீடு செய்துவிடவேண்டும். பின்னர், நீங்கள் ஓய்வு பெற்ற பிறகு முதிர்வு நன்மைகளை மாதந்தோறும் பெற்றுக்கொண்டிருக்கலாம்.
தற்போது, இத்திட்டம் ஆண்டுக்கு 6.6% வட்டி வழங்குகிறது. அதிகபட்ச நன்மைகளைப் பெற, நீங்கள் ஒரு கூட்டுக் கணக்கையும் தேர்வு செய்யலாம். மாதாந்திர வருமானத் திட்டத்திற்கு, மூன்று பேர் கூட்டு கணக்கைத் தொடங்கலாம்.
குறைந்தபட்சம், 1000 ரூபாயுடன் உங்களது கணக்கைத் தொடங்கலாம். இத்திட்டத்தில் அதிகபட்ச முதலீட்டு வரம்பு ஒரு கணக்கில் 4.5 லட்சமும், கூட்டுக் கணக்கில் ரூ .9 லட்சமும் ஆகும்.
ஒரு கூட்டு கணக்கில் தனிநபரின் பங்கைக் கணக்கிட, ஒவ்வொரு கூட்டுக் கணக்கிலும் சம பங்கு இருந்திட வேண்டும். எனவே, கூட்டு கணக்காக இருந்தாலும் ஒருவரால் ரூ .4.5 லட்சத்திற்கு மேல் முதலீடு செய்ய முடியாது.
வெறும் ரூ. 50 ஆயிரம் முதலீடு செய்வதன் மூலம், நீங்கள் ஆண்டு ஓய்வூதியமாக ரூ .3,300 சம்பாதிக்கலாம். இந்தத் தொகைக்கான வட்டி கணக்கு தொடங்கப்பட்ட நாளிலிருந்து ஒரு மாதம் முடிந்ததும் வழங்கப்படும். இந்த செயல்முறை உங்களது முதிர்வு வரை வழங்கப்படும்.
இதர பலன்கள்
டெபாசிட் செய்த தேதியிலிருந்து 1 வருடத்திற்கு முன் உங்களது வைப்புத் தொகையைத் திரும்பப் பெற முடியாது.
கணக்கு தொடங்கிய நாளிலிருந்து 1 வருடத்திற்கு பிறகு அல்லது 3 ஆண்டுகளுக்கு முன்பாக கணக்கு மூடப்படும் பட்சத்தில், வைப்பு தொகையிலிருந்து 2 சதவிகிதத்திற்குச் சமமான தொகை கழிக்கப்பட்டு மீதமுள்ள தொகை வழங்கப்படும்.
அதே சமயம், கணக்கு தொடங்கிய நாளிலிருந்து 3 வருடத்திற்கு பிறகு அல்லது 5 ஆண்டுகளுக்கு முன்பாக கணக்கு மூடப்படும் பட்சத்தில், வைப்பு தொகையிலிருந்து 1 சதவிகிதத்திற்குச் சமமான தொகை கழிக்கப்பட்டு மீதமுள்ள தொகை வழங்கப்படும்.
முதிர்வுக்கு முன் கணக்கு வைத்திருப்பவர் இறந்தால், கணக்கு மூடப்படலாம். அந்த தொகை நியமன/சட்டப்பூர்வ வாரிசுகளுக்குத் திருப்பித் தரப்படும்.