இந்தியாவில் தங்கம் விலை ஒருநாள் உயருவதும், மறுநாள் கொஞ்சம் குறைவதுமாக ஆட்டம் காட்டி வருகிறது. அதேநேரத்தில், உலகில் நிலவும் போர் பதற்றம் தங்கம் விலை மீதும் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. தங்கம் இறக்குமதி வரியை மத்திய அரசு குறைத்து இருந்தாலும், நாளுக்கு நாள் தங்கம் விலை அதிரடியாக அதிகரித்தும், சற்று குறைந்து காணப்படுகிறது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து தாறுமாறாக உயர்ந்து வந்த தங்கம் விலை கடந்த 11 ஆம் தேதி ஒரு சவரன் ரூ.64,480-க்கு விற்பனையானது. அதன்பிறகு தங்கம் விலை ஏற்ற இறக்கத்தோடு காணப்பட்டது. கடந்த 20 ஆம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 உயர்ந்து ரூ.64,560-க்கு விற்பனையாகி இதுவரை இல்லாத உச்சத்தை தொட்டது.
வாரத்தின் தொடக்க நாளான நேற்று திங்கள் கிழமை தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.64,440-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் தங்கம் விலை இன்று செவ்வாய்கிழமை மேலும் உயர்ந்து வரலாறு காணாத உச்சத்தை எட்டிப் பிடித்துள்ளது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ. 64,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ரூ. 8,075-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை
வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.108-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை சவரனுக்கு ரூ.64 ஆயிரத்தை கடந்து விற்பனை செய்யப்படுவதால் சாமானிய மக்களும், நகைப் பிரியர்களுக்கு அதிர்ச்சியடைந்துள்ளனர்.