சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி) கவுன்சிலின் 55-வது கூட்டம் நேற்றைய தினம் ஜெய்சால்மரில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், ஆயுள் காப்பீடு பிரீமியம், உணவு விநியோகம் மீதான வரிக் குறைப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. விமான எரி பொருளையும் ஜி.எஸ்.டி வரம்புக்குள் கொண்டு வர ஆலோசனை நடத்தப்பட்ட நிலையில், மாநிலங்கள் ஒப்புதல் வழங்காததால் கைவிடப்பட்டது.
ஆங்கிலத்தில் படிக்கவும்: GST Council defers proposal to lower tax on insurance premiums, food delivery
எனினும், இந்தக் கூட்டத்தில் பாப்கார்ன்கள் மீதான வரி பலரது கவனத்தையும் பெற்றது. சாதாரண பாப்கார்ன், உப்பு மற்றும் மசாலா போட்ட பாப்கார்ன், காரமெல் பாப்கார்ன் என இதன் வரி விகிதங்கள் பிரிக்கப்பட்டன. இதற்கு காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் உள்ளிட்ட பலரும் தங்கள் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.
பாப்கார்ன்களின் வரி விகிதங்களை ஜி.எஸ்.டி கவுன்சில் தெளிவுபடுத்தியுள்ளது. அதன்படி, சாதாரணமாக விற்கப்படும் பாப்கார்ன்களுக்கு 5 சதவீதமும், பேக் செய்யப்பட்டு லேபிள் ஒட்டப்பட்ட பாப்கார்ன்களுக்கு 15 சதவீதமும், காரமெல் பாப்கார்ன்களுக்கு 18 சதவீதமும் ஜி.எஸ்.டி விதிக்கப்பட்டுள்ளது.
“இது சம்பந்தமாக எந்த வரியும் புதிதாக விதிக்கப்படவில்லை மற்றும் சில துறை அலகுகள் வெவ்வேறு வரி விகிதங்களைக் கோருவதால் இது ஒரு தெளிவுபடுத்தல் மட்டுமே. எனவே, விளக்கத்தால் எழும் சர்ச்சைகளைத் தீர்க்க ஜி.எஸ்.டி கவுன்சிலால் பரிந்துரைக்கப்படும் ஒரு தெளிவுத்திறன் இது” என்று அதிகாரப்பூர்வ அறிக்கை கூறுகிறது.
148 பொருள்களுக்கான வரி விகிதங்களை முன்மொழிவதற்கு அமைச்சர்கள் குழு அவகாசம் கோரியுள்ளது. எனவே, இது தொடர்பான கூட்டம் பின்னர் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயன்படுத்தப்பட்ட மின்சார மற்றும் சாதாரண வாகனங்களின் விற்பனைக்கு 18 சதவீத ஜி.எஸ்.டி உயர்வுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இது முன்னதாக 12 சதவீதத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும், வங்கிக் கடன் பெற்றவர்கள் விதிமுறைகளை பூர்த்தி செய்யாததன் மூலம் விதிக்கப்படும் அபராதத்தின் மீது எந்த ஜி.எஸ்.டி-யும் விதிக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. செறிவூட்டப்பட்ட அரிசி மீதான வரி 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இதேபோல், ஜீன் தெரப்பிக்கு ஜி.எஸ்.டி-யில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது. உணவு விநியோகம் மீதான வரிக் குறைப்பு தற்போது முடிவு செய்யப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.
காப்பீடுகள் மீதான வரி குறைப்பு குறித்து மேலும் ஆலோசனை நடத்தப்பட வேண்டுமென உறுப்பினர்கள் கூறியதாக பீகார் மாநில துணை முதலமைச்சர் சாம்ராட் சௌத்ரி தெரிவித்துள்ளார். "குழு காப்பீடு, தனி நபர் காப்பீடு அல்லது மூத்த குடிமக்கள் காப்பீடு என எதுவாக இருந்தாலும் அடுத்த கூட்டத்தில் வரி குறைப்பு தொடர்பாக விவாதம் நடத்தப்படும்" என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மூத்த குடிமக்கள் உடல்நலக் காப்பீட்டிற்காக செலுத்தும் பிரீமியங்கள் மற்றும் டேர்ம் லைஃப் இன்சூரன்ஸுக்கு அனைவரும் செலுத்தும் பிரீமியங்களுக்கு ஜி.எஸ்.டி விலக்கு அளிப்பது குறித்து அமைச்சர்கள் குழு முன்பு விவாதித்தது. ஆயுள் காப்பீட்டு பிரீமியங்கள் மீதான ஜி.எஸ்.டி, குடும்ப உறுப்பினர்களைக் கொண்ட திட்டங்கள் உள்பட அனைத்து நபர்களுக்கும் விலக்கு அளிக்க விவாதிக்கப்பட்டது. கவரேஜ் தொகையை பொருட்படுத்தாமல் மூத்த குடிமக்கள் செலுத்தும் ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியத்துக்கு விலக்கு அளிக்கப்படுவதும் பரிசீலனையில் உள்ளது. மற்ற குடிமக்களுக்கு, ரூ. 5 லட்சம் வரையிலான உடல்நலக் காப்பீடு விலக்கு அளிக்கப்படும் என்று கருதப்பட்டது. ரூ. 5 லட்சத்துக்கும் அதிகமான மருத்துவக் காப்பீட்டுத் தொகைக்கு, தற்போதுள்ள 18 சதவீத விகிதம் தொடரும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.