எஸ்பிஐ, ஐசிஐசிஐ, எச்டிஎப்சி போன்ற வங்கிகளில் மினிமம் பேலன்சை தங்களது அக்கவுண்டில் சேமிப்பவர்களுக்கு இலவச செக் புக், 3 முதல் 5 இலவச ஏடிஎம் பரிவர்த்தனை என வாடிக்கையாளர்களை மகிழ்விக்கும் வகையில் வங்கிகள் சில சலுகைகளை இலவசமாக வழங்கி வந்தது.
இந்நிலையில், கடந்த மாதம் மறைமுக வரி ஆணையத்திடம் இருந்து வங்கிகள் வழங்கி வரும் இலவச சேவைகளுக்கு ஜிஎஸ்டி செலுத்த வேண்டும் என்று அனைத்து வங்கிகளுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
இதனால் வங்கிகள் அதிருப்தி அடைந்தனர். அந்த நோட்டீஸில் 2012-ம் ஆண்டு முதல் வங்கிகள் அளித்து வந்த இலவச சேவைகள் அனைத்திற்கும் சேர்த்து 18 சதவீத ஜிஎஸ்டி மற்றும் இவ்வளவு காலம் அதனைச் செலுத்தாமல் இருந்ததற்கு அபராதமும் சேர்த்து வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டு இருந்தது.
பின்னர் மத்திய அரசு தலையிட்ட உடன் அந்த முடிவு பின் வாங்கப்பட்டது. ஆனால் மீண்டும் மறைமுக வரி ஆணையம் மற்றும் வருவாய் துறையும் மத்திய அரசிடம் இது குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
இந்நிலையில் மீண்டும் இந்த அறிவிப்பு அமல் ஆனால், எச்டிஎப்சி வங்கி 6,500 கோடி ரூபாய், ஐசிஐசிஐ வங்கி 3,500 கோடி ரூபாய், ஆக்சிஸ் வங்கி 2,500 கோடி ரூபாய், எஸ்பிஐ 1,000 கோடி ரூபாய் என அனைத்து வங்கி நிறுவனங்களும் சேர்த்து ஜூன் மாதம் வரையில் மட்டும் 40,000 கோடி ரூபாய் சேவை வரி செலுத்த வேண்டிய நிலை ஏற்படும்.
இந்த நிலை ஏற்பட்டால், வங்கிகளும் இலவச சேவையை நிறுத்திவிடும் நிலைக்கு தள்ளப்படுவார்கள். அப்படியென்றால் பிரதமர் மோடி தொடக்கி வைத்த ஜன் தன் யோஜனா கணக்கு முதல் அனைத்து வங்கி கணக்குகளுக்கு வழங்கி வந்த இலவச சேவைகளுக்கும் கட்டணம் வசூலிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.