ஈ-சேவை மையத்தை தொடங்கி, மாதம் ரூ. 30,000-க்கு மேல் எவ்வாறு லாபம் பார்க்கலாம் என்று பாஸ்வாலா யூடியூப் சேனலில் குறிப்பிடப்பட்டுள்ளது. அது தொடர்பான தகவல்கள் அனைத்தையும் இந்த செய்திக் குறிப்பில் காணலாம்.
இந்த ஈ-சேவை மையம் என்பது அரசு மற்றும் தனியார் சேவைகளை மக்களுக்கு எளிதாக கொண்டு சேர்க்கும் ஒரு பொது சேவை மையமாகும். கிராமப்புறங்களில் வசிக்கும் மக்களுக்கு, மொபைல் போன் மற்றும் இணையம் பயன்பாடு குறித்து முழுமையாக தெரியாத காரணத்தால், அவர்களுக்கு வழிகாட்டுதல் தேவைப்படுகிறது. இந்த சூழலில், நீங்கள் ஒரு ஈ-சேவை மையத்தை திறப்பதன் மூலம் அவர்களுக்கு உதவி செய்வதோடு மட்டுமல்லாமல், ஒரு நல்ல லாபத்தையும் ஈட்டலாம்.
ஒரு ஈ-சேவை மையத்தை தொடங்க, சில வழிகாட்டுதல்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. அதன்படி, அடையாளச் சான்று, பான் கார்டு, வங்கி பாஸ்புக் அல்லது காசோலை புத்தகத்தின் முதல் பக்கத்தின் நகல், குடிமக்கள் அணுகல் எண் (Citizen Access Number - CAN), எம்.எஸ்.எம்.இ சான்றிதழ், ஜி.எஸ்.டி.ஐ.என் (Goods and Services Tax Identification Number) சான்றிதழ் ஆகியவை இதற்கு கட்டாயமாகும்.
ஒரு ஈ-சேவை மையத்தைத் தொடங்க சில உபகரணங்கள் முக்கியம் ஆகும். குறிப்பாக, கம்ப்யூட்டர் அல்லது லேப்டாப், 120 GB ஹார்ட் டிஸ்க், யு.பி.எஸ், பிரிண்டர், டிஜிட்டல் கேமரா, ஸ்கேனர், இணைய சேவை, பயோமெட்ரிக் மெஷின், ஐரிஸ் ஸ்கேனர், 10x10 அளவுடைய வணிக இடம் ஆகியவை தேவைப்படும்.
ஈ-சேவை மையத்தை தொடங்க, தமிழ்நாடு மின் ஆளுமை முகமையின் (TNeGA) அதிகாரப்பூர்வ வலைத்தம், CSC அமைப்பின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் மூலம் நீங்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பித்த 4-5 நாட்களில், நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தால், ஒரு பயனர்பெயர் (username) மற்றும் கடவுச்சொல் (password) வழங்கப்படும். இந்த விவரங்களைக் கொண்டு நீங்கள் உள்நுழைந்து சேவைகளை வழங்கலாம்.
இந்த ஈ-சேவை மையத்திற்கு அதிகபட்சமாக ரூ. 50,000 வரை தேவைப்படலாம். மேலும், நீங்கள் தேர்வு செய்யும் கடையின் அளவு மற்றும் அதன் இருப்பிடத்தை பொறுத்து, இந்தத் தொகையானது மாறுபடும் என்பது குறிப்பிடத்தக்கது.