ஆர்.சந்திரன்
நீண்ட தூர ரயில் பயணங்களின்போது, ரயில் பெட்டிக்குள் விற்பனை செய்யப்படும் உணவு பொருட்களுக்கு உரிய ரசீதை சம்மந்தப்பட்ட விற்பனையாளர், அல்லது முகவர் தரவில்லை என்றால், அதற்கு கட்டணம் செலுத்த வேண்டாம் என இந்தியன் ரயில்வே பரிந்துரைக்கிறது.
ரயில் பயணத்தின்போது வசூலிக்கப்படும் உணவின் கட்டணம், நிர்ணயித்த அளவைவிட அதிகமாக இருப்பதாக பொதுவான குற்றச்சாட்டு உண்டு. உதாரணமாக, கடந்த ஆண்டில் ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான காலத்தில் மட்டும் உணவுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டதாக 7 ஆயிரம் புகார்கள் வந்துள்ளன என்கின்றன ரயில்வே வட்டாரங்கள். இதுபோன்ற காரணங்களால், அதைத் தடுக்கும் நோக்கத்தில் உரிய ரசீதைக் கொடுத்து மட்டுமே பணத்தைப் பெறலாம் என ரயில்வே வலியுறுத்துகிறது.
வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் இதை முறையாக ரயில்களில் கடைபிடிக்க வலியுறுத்தும் வண்ணம், தற்போது ரயில் பயண முன்பதிவு செய்யும் வலைதளங்களிலும், ரயில் பயணச்சீட்டு பெறும் பிற இடங்களிலும் இது குறித்து தகவல்கள் இடம்பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. ஐஆர்சிடிசி வலைதளத்திலும் இதுகுறித்த தகவல் இடம்பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே தரப்பில் கூறப்படுகிறது.
ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயலின் முயற்சியால், இந்த அதிரடி நடவடிக்கை தொடங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே உணவுக்கு கூடுதல் கட்டணம் வசூலித்தால், நடவடிக்கை உண்டு என்றும், ஆதாரத்துடன் இது கண்டுபிடிக்கப்பட்டால், சம்மந்தப்பட்ட ஒப்பந்ததாரர் நீக்கப்படுவார் என்று எச்சரிக்கை வெளியிடப்பட்டு இருந்தும் கள நிலவரத்தில் மாற்றம் ஏற்படவில்லை என்பது கவனிக்கத்தக்கது. இதனால்தான் அடுத்த கட்ட நடவடிக்கையாக, இந்தியன் ரயில்வே புதிய நிதியாண்டில் இந்த காரியத்தில் களமிறங்குகிறது.