டிராக்டருக்கு ரூ.5 லட்சம் மானியமும், வேளாண் இயந்திர வாடகை மையம் அமைக்க ரூ.10 லட்சமும் தமிழ்நாடு அரசு மானியமாக அறிவித்துள்ளது.
இது குறித்து வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே., பன்னீர் செல்வம் விடுத்துள்ள அறிக்கையில், “விவசாயிகள் உரிய காலத்தில் சாகுபடி பணிகளை மேற்கொள்ள, வேளாண் இயந்திர மயமாக்குதல் திட்டத்தினை தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது.
இந்தத் திட்டத்தில், தனிப்பட்ட விவசாயிகளுக்கு 40 சதவீதம் மானியம் வழங்கப்படும். அதேபோல், குறு, சிறு, ஆதிதிராவிட, பழங்குடியின, பெண் விவசாயிகளுக்கு 50 சதவீதம் மானியம் வழங்கப்படும்.
அந்த வகையில், டிராக்டருக்கு ரூ.5 இலட்சம், மினி டிராக்டருக்கு ரூ.2.25 இலட்சம், விதைப்புக் கருவிக்கு ரூ.24,100, கொத்துக் கலப்பைக்கு ரூ.50,000, பவர் டில்லருக்கு ரூ.85,000, சுழல் கலப்பைக்கு ரூ.44,800, நெல் நடவு இயந்திரத்திற்கு ரூ.5 இலட்சம், புதர் அகற்றும் கருவிக்கு ரூ.30,000, களையெடுக்கும் இயந்திரத்திற்கு ரூ.63,000, கரும்பு சோகை உரிக்கும் கருவிக்கு ரூ.75,000, நிலக்கடலை அறுவடை இயந்திரத்திற்கு ரூ.75,000, நெல் அறுவடை இயந்திரத்திற்கு ரூ.11 இலட்சம், தென்னை ஓலைகளை துகளாக்கும் கருவிக்கு ரூ.63,000, பல்வகைப் பயிர் கதிரடிக்கும் இயந்திரத்திற்கு ரூ.2.50 இலட்சம், வைக்கோல் கட்டும் கருவிக்கு ரூ.2.25 இலட்சம் மற்றும் கரும்பு சோகையை துகளாக்கும் கருவிக்கு ரூ.1.25 இலட்சமும் மானியமாக வழங்கப்பட உள்ளது.
இதேபோல், தட்டை வெட்டும் கருவிக்கு ரூ.20,000/- மானியமாக வழங்கப்படும். முதற்கட்டமாக, 1615 வேளாண் இயந்திரங்களை மானியத்தில் வழங்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
மேலும் வேளாண் இயந்திர மையம் அமைக்க ரூ.10 லட்சம் மானியம் வழங்கப்படும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil