/indian-express-tamil/media/media_files/2025/10/29/passport-seva-2025-10-29-16-15-50.jpg)
துபாயில் என்.ஆர்.ஐ-களுக்கு புதிய இ-பாஸ்போர்ட் சேவை: விண்ணப்பிப்பது எப்படி? மாற்றங்கள் என்னென்ன?
உலகளவில் பாஸ்போர்ட் வழங்கும் செயல்முறையை எளிமையாக்கும் நோக்கில், இந்திய அரசு மேம்படுத்தப்பட்ட உலகளாவிய பாஸ்போர்ட் சேவா திட்டம் 2.0-வை அறிமுகப்படுத்தியுள்ளது. புதிய அமைப்பின் மூலம் பாஸ்போர்ட் சேவைகள் அனைத்தும் 2025 ஆம் ஆண்டு அக்டோபர் 28-ம் தேதி முதல் துபாயில் உள்ள இந்தியத் துணைத் தூதரகத்தில் (Consulate General of India) தொடங்கப்பட்டுள்ளன.
உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான இந்தியர்களை (சுமார் 4.3 மில்லியன் பேர்) கொண்ட ஐக்கிய அரபு அமீரகம் (UAE), புதிய சேவையைப் பெறும் முதல் நாடுகளில் ஒன்றாகும். பாஸ்போர்ட் சேவா 2.0 திட்டத்தின் முக்கிய அம்சம் என்னவென்றால், வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு (NRI-கள்) சிப் உள்ளீட்டப்பட்ட (Embedded Chip) நவீன இ-பாஸ்போர்ட்டுகள் (e-passports) வழங்கப்படுவதுதான். இந்தப் புதிய தொழில்நுட்ப உதவியால், துபாயில் வசிக்கும் இந்தியர்கள் சர்வதேச விமான நிலையங்களில் குடிவரவுச் செயல்முறையை (Immigration Process) விரைவாக முடிக்க முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டிஜிட்டல் மயமாக்கப்பட்ட விண்ணப்ப நடைமுறை
புதிய பாஸ்போர்ட் 2.0 திட்டம், நிர்வாகப் பிழைகளைக் குறைக்கவும், நேரில் காத்திருக்கும் நேரத்தைக் குறைக்கவும், விண்ணப்ப நடைமுறையை முழுமையாக டிஜிட்டல் மயமாக்குவதில் கவனம் செலுத்துகிறது.
முக்கிய மேம்பாடுகள்:
ஆவணங்களை ஆன்லைனில் பதிவேற்றுதல்: விண்ணப்பதாரர்கள் இனி அனைத்து சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்து அமைப்பு (ICAO) இணக்கமான ஆவணங்களையும், புகைப்படம் மற்றும் கையொப்பங்கள் உட்பட, பாஸ்போர்ட் சேவா திட்டம் (PSP) இணையதளம் மூலம் நேரடியாகப் பதிவேற்றலாம். இந்த வசதியைப் பயன்படுத்துவது செயலாக்க மற்றும் காத்திருப்பு காலத்தைக் குறைக்கும் எனத் துணைத் தூதரகம் பரிந்துரைத்துள்ளது.
எளிய திருத்தங்கள்: சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களில் சிறிய பிழைகள் இருந்தால், விண்ணப்பதாரர்கள் முழுப் படிவத்தையும் மீண்டும் தட்டச்சு செய்ய வேண்டியதில்லை. சேவை வழங்குநர் (Service Provider) அங்கேயே கூடுதல் கட்டணம் இன்றித் தேவையான திருத்தங்களைச் செய்ய அதிகாரம் பெற்றுள்ளார்.
விண்ணப்பிக்கும் முறை
பதிவு: விண்ணப்பதாரர்கள் முதலில் புதிய பி.எஸ்.பி (PSP) இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.
உள்நுழைந்த பிறகு, புதிய விண்ணப்பத்தை உருவாக்கத் தேவையான விருப்பத்தைத் தேர்ந்தெடுத்து, கேட்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களையும் துல்லியமாகப் பூர்த்தி செய்ய வேண்டும். ஆன்லைன் படிவத்தைச் சமர்ப்பித்த பிறகு, விண்ணப்பத்தைப் பிரதி எடுத்து (Printout) ஆன்லைனில் சந்திப்பு நேரத்தை (Appointment) பதிவு செய்ய வேண்டும்.
இறுதியாக, விண்ணப்பதாரர் நிர்ணயிக்கப்பட்ட பி.எல்.எஸ் (BLS) சர்வதேச சேவை மையத்திற்கு, பதிவுசெய்த நாளில், பிரிண்ட் அவுட் எடுத்த படிவத்தையும் தேவையான அனைத்து ஆதரவு ஆவணங்களையும் சரிபார்ப்பதற்காக எடுத்துச் செல்ல வேண்டும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us