அலிபாபா ஜாக் மா ! இவரது ஓய்வு வதந்தி உலகம் முழுவதையும் விவாதிக்க வைக்கிறது. யார் இவர்? ஏன் இத்தனை கவனம் இவர் மீது? என விவரிக்கிறார் எழுத்தாளர் அ.பெ.மணி.
அ.பெ.மணி
அலிபாபா கதைகள் ஆசிய நாடுகளில் மிகவும் பிரபலம். அதன் குகைகளில் தேடக் கிடைக்காத பொக்கிசங்கள் காணக் கிடைக்கும் என்பதே காலகாலமாக நிலவும் நம்பிக்கை.
செஞ்சீனத்தின் மிகப் பெரிய இணையதள நிறுவனத்தின் பெயர் அலிபாபா. பள்ளிக்கூடம் ஒன்றில் ஆங்கில ஆசிரியராக இருந்த ஜாக் மா சுமார் இருபது வருடங்களுக்கு முன் அமெரிக்கா சென்ற போது இணையத்தின் பயன்பாடுகளை முதன் முறையாக அறிந்து கொள்ளத் தொடங்கினார்.
இணையதள பயன்பாடுகளின் நீள, அகலங்களையும் அதன் உயரத்தையும் புரிந்து கொண்ட ஜாக் மா, ஏப்ரல் மாதம் 4 ஆம் தேதி 1999 வது வருடம் அலிபாபா என்ற இணைய தள விற்பனை நிறுவனத்தினை ஆரம்பித்தார்.
19 வருடங்களில் அலிபாபா மற்றும் ஜாக் மா வின் வளர்ச்சி பிரமிக்கத்தக்க வகையில் இருந்தது.
இந்த காலகட்டத்தில் சீன பொருளாதாரமும் பெரிய அளவில் வளர்ந்தது. அமெரிக்கா போன்ற நாடுகளே சீனாவின் வளர்ச்சியை வியந்து பார்த்தன. அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவி ஏற்ற பிறகு முதலில் சந்தித்த சீனராக ஜாக் மா வும் உயர்ந்து நின்றார்.
1964 ஆவது வருடம் செப்டம்பர் மாதம் 10 ஆம் தேதி பிறந்த ஜாக் மா, தனது 54 ஆவது வயதில் இந்த வருடம் ஓய்வு பெறுவதாக தகவல்கள் வந்தன. 420 பில்லியன் டாலர் மதிப்புடைய அலிபாபா நிறுவனத்தில் இருந்து விலகி தனது மனதிற்கு மிகவும் நெருக்கமான கல்விப் பணிகளில் ஈடுபடப் போவதாக வதந்திகள் பரவி வருகின்றன.
மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ்-ஐ தனது வழிகாட்டி என வெவ்வேறு இடங்களில் ஜாக் மா புகழ்ந்துள்ளார், பில் கேட்ஸ் போன்ற பெருந் கொடையாளராக தான் வாழ வேண்டும் என்பது ஜாக் மா வின் ஆசைகளில் ஒன்று. அதற்காக ஜாக் மா பவுண்டேஷனை சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்னரே உருவாக்கி விட்டார்.
கல்வி சார்ந்த நன்கொடை பணிகளில் இந்த அமைப்பு கவனம் செலுத்தி வருகின்றது. முதன் முதலாக மாதம் ஒன்றிற்கு 12 டாலர் சம்பளத்தில் பணியில் சேர்ந்த ஜாக் மா, அலிபாபா மற்றும் அலிபே ஆகிய நிறுவனங்களில் பல்லாயிரம் கோடி பெறுமானமுள்ள பங்குகளை இன்று வைத்துள்ளார்.
தனது கல்லூரி படிப்பில் இரண்டு முறை தோல்வி அடைந்து மூன்றாம் முறை வென்றவர். உலகின் புகழ் பெற்ற வணிக கல்வியகமான ஹார்வர்ட் இவரது விண்ணப்பத்தினை 10 முறை நிராகரித்து உள்ளனர்.
ஆசிரிய பணியை விட்டு விட்டு இணையம் சார்ந்த தொழிலில் ஈடுபட முடிவு செய்த மாவின் முதல் இரண்டு முயற்சிகள் தோல்வி அடைந்து விட்டன. நான்கு ஆண்டுகள் கழித்து தனது 17 நண்பர்களை அழைத்து தனது புதிய நிறுவனமான அலிபாபாவில் முதலீடு செய்ய கேட்டுக் கொண்டார்.நிறுவனம் ஓரளவு வளர்ந்த பிறகு சாப்ட் பேங்க், யாஹூ போன்ற நிறுவனங்கள் பெரிய அளவில் முதலீடு செய்தன.
தலைமை செயல் அதிகாரி பொறுப்பில் இருந்து 2013-ல் மா விலகினார். தற்போது இந்த செப்டம்பர் 10 அன்று அலிபாபா நிறுவனத்தில் இருந்து முற்றிலும் ஓய்வு பெற்று கல்வி சார்ந்த சமூக நல பணிகளில் ஈடுபட முடிவு செய்துள்ளதாக நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டது பரபரப்பானது.
சீனாவின் பின்தங்கிய மாகாணம் ஒன்றில் எளிய பெற்றோர்களின் பிள்ளையாகப் பிறந்த மா, தன்னை ஒரு சராசரி மாணவன் என்றே குறிப்பிடுகின்றார். ஆசிரியராகப் பணியைத் தொடங்கி சரியான நேரங்களில் தொழில் முனைவோர் ஆக விரும்பி தெளிவான முடிவுகளால் பெரும் நிறுவனங்களை கட்டி எழுப்பி உலகம் கவனிக்கிற ஆளுமையாக உயர்ந்தார், இப்போது 54 வயதில் ஜாக் மா ஓய்வு வதந்தி உலகம் முழுக்க உள்ள கார்ப்பரேட் நிறுவனங்களை திகைக்க வைத்துள்ளது.
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Business News in Tamil by following us on Twitter and Facebook
Web Title:Jack ma retirement and story