கேரளா லாட்டரி துறை ஆண்டுதோறும் 6 பம்பர் லாட்டரி டிக்கெட் குலுக்கலை நடத்தி பரிசுகளை அறிவித்து வருகிறது. இதில், ஓணம் பண்டிகை காலத்தில் நடத்தப்படும் ஓணம் பம்பர் லாட்டரி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதற்கு காரணம், ஓணம் பம்பர் லாட்டரி வெல்லும் முதல் நபருக்கு 25 கோடி ரூபாய் பரிசாக வழங்கப்படுகிறது. இதேபோல், இந்த குலுக்கலில் மட்டும் தான் முதல் பரிசு உட்பட 9 பரிசுகள் வழங்கப்படுகிறது. இரண்டாம் பரிசாக 20 பேருக்கு தலா ஒரு கோடி ரூபாயும், மூன்றாம் பரிசாக 20 பேருக்கு தலா 50 லட்சம் ரூபாயும் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கேரளா லாட்டரி துறை கடந்த ஆகஸ்ட் 1-ம் தேதி ஓணம் பம்பர் லாட்டரி டிக்கெட்டை அறிமுகம் செய்தது. இதற்கான குலுக்கல் கடந்த 9 ஆம் தேதி நடைபெற்றது. சுமார் 80 லட்சம் லாட்டரி டிக்கெட்டுகள் அச்சிடப்பட்டு, மொத்தமாக 72 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனை ஆகியுள்ளது. இதன் மூலம் கேரளா லாட்டரி துறைக்கு 360 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.
இந்த நிலையில், கடந்த 9 ஆம் தேதி நடைபெற்ற கேரளா லாட்டரி குலுக்கலில் வயநாடு மாவட்டம் சுல்தான் பத்தேரியில் இருந்து விற்பனை செய்யப்பட்ட லாட்டரி டிக்கெட் TG 434222 என்கிற எண்ணிற்கு முதல் பரிசு கிடைத்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த டிக்கெட்டை கர்நாடக மாநிலம் மைசூர் மாவட்டம் பாண்டவபுரத்தைச் சேர்ந்த அல்தாஃப் பாஷா (வயது 50) என்பவர் வாங்கியுள்ளார்.
டூவீலர் மெக்கானிக்கான அல்தாப், 15 நாட்களுக்கு முன்பு கேரள மாநிலம் வயநாட்டிற்கு சென்றபோது, சுல்தான் பத்தேரியில் ரூ 1000 கொடுத்து 2 லாட்டரி சீட்டுகளை வாங்கியுள்ளார். அதில் ஒரு லாட்டரி சீட்டிற்கு தான் முதல் பரிசான 25 கோடி ரூபாய் கிடைத்துள்ளது. இதனிடையே, முதல் பரிசு வென்ற அல்தாஃப் பாஷா-வுக்கு தமிழ்நாட்டை சேர்ந்த ஏஜென்ட் லாட்டரி டிக்கெட் விற்பனை செய்துள்ளார்.
முதல் பரிசு வென்ற லாட்டரி டிக்கெட்டை ஜீனேஷ் என்கிற ஏஜென்ட் விற்பனை செய்ததாக முன்பு கூறப்பட்டாலும், அவர் நேரடியான ஏஜென்ட் என்பதும், துணை ஏஜென்ட் தமிழகத்தைச் சேர்ந்த நாகராஜ் தான் எனபதும் தற்போது தான் தெரிய வந்துள்ளது. இதனையடுத்து, ஜீனேஷுக்கு 25 லட்சம் ரூபாய் அளிக்கப்பட உள்ளது.
மேலும், துணை ஏஜென்ட் நாகராஜுக்கு 2. 25 கோடி ரூபாய் கமிஷன் வழங்கப்பட உள்ளது. முதல் பரிசு வென்ற அல்தாஃப்க்கு வருமான வரி, லாட்டரி வரி, கல்வி மற்றும் சுகாதாரத்திற்கான தொகை என அனைத்து பிடித்தங்களும் போக 12.8 கோடி ரூபாய் கையில் வழங்கப்படும் கூறப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“