koyambedu market vegetable koyambedu : 'நிவர்' புயல் அச்சுறுத்தல் காரணமாக, கோயம்பேடு மார்க்கெட்டிற்கு விற்பனைக்கு வந்த காய்கறிகள் அனைத்தும் விற்று தீர்ந்தன. விலை ஏற்றமும் இருந்தது.
சென்னை, கோயம்பேடு மார்க்கெட்டிற்கு, பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி, வெளி மாநிலங்களில் இருந்தும் காய்கறிகள் விற்பனைக்கு வருகின்றன. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்ட வியாபாரிகள், இங்கு வந்து காய்கறிகளை வாங்கி செல்கின்றனர். நாள்தோறும், 350க்கும் மேற்பட்ட லாரிகளில், காய்கறிகள் விற்பனைக்கு வரும். விற்பனையாகாத காய்கறிகளை, மூட்டைகளில் எடுத்து வைத்து, அடுத்த நாள், குறைந்த விலையில், வியாபாரிகள்விற்பனை செய்வது வழக்கம்.
நிவர் புயல் காரணமாக, பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்யும் என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துஉள்ளது. இதனால், ஒரு வாரத்திற்கு தேவையான காய்கறிகளை, இருப்பு வைக்கும் நடவடிக்கைகளில், பொதுமக்கள் நேற்று ஆர்வம் காட்டினர். நேற்று விற்பனைக்கு வந்தகாய்கறிகள் அனைத்தும், விற்று தீர்ந்தன.
நேற்று முன்தினம் இருப்பு வைக்கப்பட்ட காய்கறிகளும் காலியானது. விற்பனை களைக்கட்டி, கூடுதல் வருவாய் கிடைத்ததால், காய்கறி மொத்த வியாபாரிகள், சிறு மொத்த வியாபாரிகள் உற்சாகம் அடைந்தனர். அதே நேரத்தில், சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் உள்ள மார்க்கெட்கள் மற்றும் கடைகளில், காய்கறிகள் கூடுதல் விலையில் விற்பனை செய்யப்பட்டன. வேறு வழியின்றி அவற்றை அதிக விலை கொடுத்து, பொதுமக்கள் வாங்கிச் சென்றனர்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”