“மைக்ரோ பச்சத்” (LIC MIcro Bachat) என்னும் புதிய நுண்காப்பீட்டுத் திட்டத்தை எல்ஐசி அறிமுகம் செய்துள்ளது. வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள மக்கள் பயன்பெறும் வகையில் இந்த காப்பீட்டுத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
எல்ஐசியின் மைக்ரோ பச்சத் காப்பீட்டு திட்டமானது, குறைந்த தவணை முறையில் பிரீமியம் செலுத்தக்கூடிய வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. இது பங்குச்சந்தை சாராதது. மேலும் எண்டோவ்மெண்ட், நுண் காப்பீட்டுத் திட்ட பாதுகாப்பு, சேமிப்பு ஆகியவற்றை இணைத்து அளிக்கிறது.
இதுவரை 50,000 ரூபாய் வரை மட்டுமே நுண் காப்பீட்டுத் திட்டங்களில் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் இந்த எல்ஐசி மைக்ரோ பச்சத் திட்டத்தில் 2 லட்சம் ரூபாய் வரை காப்பீடு அளிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
எல்ஐசியின் மைக்ரோ பச்சத் பாலிசிதாரர், பாலிசி காலத்திற்குள் இறக்க நேர்ந்தால் அவரது நாமினிக்கு காப்பீட்டு தொகை அளிக்கப்படும். இதுவே பாலிசி காலத்தை நிறைவு செய்யும் பாலிசிதாரர்களுக்கு முதிர்வுத் தொகை வழங்கப்படும்.
3 ஆண்டு தொடர்ந்து பிரீமியம் செலுத்திய பாலிசிதாரர்களுக்கு உடனடி பண தேவைக்கு கடன் பெறும் வசதியும் இதில் உண்டு.
இந்நிலையில், எல்ஐசியின் மைக்ரோ பச்சத் பாலிசியை வாங்குபவர்கள் 18 முதல் 55க்குள் வயது இருக்கும் போது மருத்துவ பரிசோதனையின்றி இப்பாலிசி வழங்கப்படும். இந்தத் திட்டத்தின் கீழ் வரும் பாலிசிகளின் அடிப்படை காப்பீட்டுத் தொகை 50,000 ரூபாய் முதல் 2,00,000 ரூபாய் மிகாமல் இருக்கும்..
இதில் காலாவதியான பாலிசிகளுக்கு, மூன்று வருடங்கள் பிரீமியம் செலுத்தியிருந்தால் 6 மாதத்திற்கும், 5 வருடங்கள் பிரீமியம் செலுத்தியிருந்தால் 2 வருடத்திற்கும் தொடர் பாதுகாப்பு உண்டு. எல்ஐசியின் மைக்ரோ பச்சத் பாலிசி பிரீமியத்தை ஆண்டு, அரையாண்டு, காலாண்டு மற்றும் மாதத் தவணைகளில் செலுத்தலாம். கூடுதல் பிரீமியம் செலுத்தினால், விபத்து பாதுகாப்பு இணைப்பு, விபத்து பாதுகாப்பு மற்றும் உடல் ஊனம் இணைப்பையும் தேர்வு செய்துக்கொள்ளலாம்.