இந்திய குடிமக்கள் அனைவரின் அடையாளமாக அமையப்பெற்ற ஆதார் அடையாள அட்டை, இன்று அனைத்துவிதமான அரசு நலத்திட்டங்கள், உதவிகள், சிம்கார்ட்கள், கேஸ் இணைப்பு, வங்கிக் கணக்குகள் தொடங்க என அனைத்திற்கும் தேவைப்படும் ஒன்றாகும்.
இந்நிலையில், அரசின் நலத்திட்டங்களைப் பெற விரும்பும் எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்கள் தங்களது ஆதார எண்ணை கண்டிப்பாக வங்கிக் கணக்குடன் இணைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, ஆதார் எண்ணை இணைக்காத வாடிக்கையாளர்களுக்கு, அரசாங்கத்திலிருந்து நேரடியாக வங்கிக் கணக்கிற்கு வரும் பணம் கிடைக்கப்பெறாது. இந்த தகவலை எஸ்பிஐ வங்கி தனது அதிகாரப்பூர்வ பக்கத்தில் தெரிவித்துள்ளது.
வாடிக்கையாளர்கள் தங்கள் ஆதார் அட்டை தங்களது வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்டுள்ளதா என்பதை UIDAI-யின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பார்வையிட்டுத் தெரிந்துகொள்ளலாம். அதில், ஆதார் எண் இணைக்கப்படவில்லை என்றால், கீழே உள்ள வழிமுறைகளைப் பின்பற்றி எளிதாக இணைத்துவிடலாம்.
- முதலில் வாடிக்கையாளர் எஸ்பிஐ ஏடிஎம்-இல் 4 டிஜிட் நம்பரை பதிவிட வேண்டும்.
- அடுத்து, ரெஜிஸ்டரேஷன் பிராசஸை தொடர்ந்து, சர்விஸ் ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்
- இதையடுத்து, account type-ஐ கிளிக் செய்து, ஆதார் எண்ணை பதிவிட வேண்டும்.பின்னர், உறுதிப்படுத்திக்கொள்ள மீண்டும் ஆதார் எண்ணை பதிவிட வேண்டும்.
- உடனடியாக, வங்கி கணக்கில் பதிவு செய்துள்ள செல்போன் எண்ணுக்கு, ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ளது குறித்து குறுஞ்செய்தி வரும்.
அதே போல், வாடிக்கையாளர்கள் இணையம் வழியாகவும் ஆதார் எண்ணை வங்கி கணக்குடன் இணைக்கலாம்.
- முதலில் எஸ்பிஐயின் அதிகாரப்பூர்வ தளமான www.onlinesbi.com-க்கு செல்ல வேண்டும்.
- அதில், My Accounts கிளிக் செய்து, ஆதார் எண்ணை லிங்க் செய்யும் ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
- தொடர்ந்து, அடுத்த திரையில் ஆதார் விவரங்களை பதிவிட்டு, சப்மிட் பட்டன் அழுத்த வேண்டும்.
- அவ்வளவு தான், வங்கியில் பதிவு செய்துள்ள எண்ணுக்கு, ஆதார் இணைக்கப்பட்டுள்ளது குறித்து மெசேஜ் வந்துவிடும்.
இதுமட்டுமின்றி, எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் தங்களது ஆதார் கார்டை வங்கியுடன் SBI Anywhere App மூலமும், அருகிலுள்ள வங்கி கிளைகள் மூலமும் இணைத்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.