அஞ்சல் அலுவலகங்களில் இருந்து செயல்படுத்தப்பட்டு வரும் மிக முக்கியமான சேமிப்பு திட்டங்களின் பட்டியல் இந்தப் பதிவில் தொகுக்கப்பட்டுள்ளன அவற்றை ஒன்வொன்றாக காணலாம்.
சுகன்யா சம்ரிதி திட்டம்:
இந்த திட்டத்தை தமிழில் செல்வ மகள் சேமிப்பு திட்டம் என்று அழைக்கின்றனர். இந்த திட்டத்தின் மூலம் ஆண்டுக்கு குறைந்தபட்சம் ரூ. 250 முதல் அதிகபட்சம் ரூ. 1.5 லட்சம் வரை முதலீடு செய்ய முடியும். தற்போது இந்த திட்டத்திற்கு 8.20 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. வருமான வரிச் சட்டத்தின் 80சி பிரிவின் கீழ் வரிச் சலுகையும் இதற்கு கிடைக்கிறது. ஒரு பெண் குழந்தைக்கு ஒரு கணக்கு மட்டுமே தொடங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
மூத்த குடிமக்களுக்கான சேமிப்புத் திட்டம்:
மூத்த குடிமக்களுக்கான சேமிப்புத் திட்டத்தில் குறைந்தபட்சம் ரூ. 1,000 முதல் அதிகபட்சம் ரூ. 30 லட்சம் வரை முதலீடு செய்யலாம். 5 ஆண்டு கால அளவு கொண்ட இந்தத் திட்டத்தில் இணைய குறைந்தபட்ச வயது 60 ஆக இருக்க வேண்டும். இதற்கும் 80சி பிரிவின் கீழ் வரிச் சலுகை உண்டு. இந்த திட்டத்திற்கும் 8.20 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது.
பொது வருங்கால வைப்பு நிதி:
இந்த திட்டம் 15 ஆண்டு கால அளவு கொண்டது. இதில் ஆண்டுக்கு குறைந்தபட்சம் ரூ. 500 முதல் அதிகபட்சம் ரூ. 1.5 லட்சம் வரை முதலீடு செய்யலாம். 7.10 சதவீத வட்டி வழங்கப்படும் இந்த திட்டத்தின் முதிர்வு தொகைக்கு வரி கிடையாது. மேலும், 80சி பிரிவின் கீழ் வரிச் சலுகையும் உண்டு.
கிசான் விகாஸ் பத்திரம்:
கிசான் விகாஸ் பத்திரத்தில் குறைந்தபட்ச முதலீடு ரூ. 1,000 ஆகும். அதிகபட்ச முதலீட்டுக்கு வரம்பு இல்லை. இதில் 2.5 ஆண்டுகளுக்குப் பிறகு முதலீட்டை திரும்பப் பெற முடியும். ஆனால், இதற்கு வரிச் சலுகை கிடையாது. இதன் வட்டி விகிதம் 7.5 சதவீதம் ஆகும்.
5 ஆண்டு தேசிய சேமிப்பு பத்திரம்:
5 ஆண்டு தேசிய சேமிப்புப் பத்திரத்தில் குறைந்தபட்ச முதலீடு ரூ. 1,000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதிகபட்ச முதலீட்டுக்கு வரம்பு கிடையாது. இதற்கு 80சி பிரிவின் கீழ் வரிச் சலுகை உண்டு. இதற்கு 7.70 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது.