வருமான வரி வரம்பில் மாற்றம் செய்வதற்கான பரிந்துரையை மத்திய அரசிடம் பணிக்குழு தாக்கல் செய்துள்ளது. இதனால், ஆண்டுக்கு ஒன்றரை லட்சம் ரூபாய் வரை சேமிக்க முடியும் என்று பணிக் குழு குறிப்பிட்டுள்ளது வரி செலுத்துபவர்களுக்கு பெரும் ஆறுதலாக அமைந்துள்ளது.
வருமான வரி வசூல் செய்வதற்காக கடந்த 58 ஆண்டுகளாக நடைமுறையில் உள்ள வருமானவரி சட்டத்தை எளிமைப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான பரிந்துரைகளை வழங்க மத்திய அரசு நேரடி வரிவிதிப்பு வாரியத்தின் உறுப்பினர் அகிலேஷ் ரஞ்சன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது.
இந்த குழு 21 மாதங்களாக 90 முறை கூடி ஆலோசனை மேற்கொண்டு, தங்களது 600 பக்க அறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் கடந்த 19ம் தேதி அக்குழு அளித்தது.
தற்போதைய நிலையில், இரண்டரை லட்சம் ரூபாய் வரையிலான ஆண்டு வருமானத்துக்கு வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. இரண்டரை லட்சம் ரூபாயிலிருந்து 5 லட்சம் ரூபாய் வரை வருமானத்துக்கு 5 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது. எனினும், ஒட்டுமொத்த வருமானம், 5 லட்சம் ரூபாய்க்குள் இருக்கும்போது, நடப்பு நிதியாண்டு முதல் வரி செலுத்த வேண்டியதில்லை என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
புதிய பரிந்துரையில், 5 லட்சம் ரூபாய் வரை வருமானம் இருந்தால், வரி விலக்கு அளிப்பதை தொடரலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது 5 லட்சம் ரூபாய் முதல் 10 லட்சம் ரூபாய் வரையிலான வருமானத்திற்கு 20 சதவீதமும் வரி வசூலிக்கப்படும் நிலையில், அதனை 10 விழுக்காடாக குறைக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
தற்போது 10 லட்சம் ரூபாய்க்கும் மேலான வருமானத்துக்கு 30 சதவீதம் வரி வசூலிக்கப்படுகிறது. ஆனால், புதிய பரிந்துரைப்படி, 10 லட்சம் ரூபாய் முதல் 20 லட்சம் ரூபாய் வரை 20 சதவீதமும், 20 லட்சம் முதல் 2 கோடி ரூபாய் வரையான வருவாய்க்கு 30 சதவீதமும் வரி வசூலிக்கலாம் என கூறப்பட்டுள்ளது. 2 கோடி ரூபாய்க்கு மேலான வருமானத்துக்கு 35 சதவீதமும் வரி விதிக்கவும் யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய வரி வரம்பை அமல்படுத்துவதால், 20 லட்சம் ரூபாய் வரையான வருமானம் பெறுவோர், ஆண்டுக்கு ஒன்றரை லட்சம் ரூபாய் வரை சேமிக்க முடியும் என்று பணிக் குழு குறிப்பிட்டுள்ளது.
இந்த பரிந்துரைகளை முழுவதுமாக ஆய்வு செய்து மத்திய அரசு தனது முடிவை அறிவிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.