கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சையின் தலைமையின் மீதான நம்பிக்கை ஊழியர்களிடையே குறைந்து வருவதாக அதிர்ச்சி அளிக்கும் தகவல் வெளியாகியுள்ளது.
சுந்தர் பிச்சை மீதான நம்பிக்கை:
கூகுள் நிறுவனத்தின் செயல் அதிகாரியாக கடந்த 2015-ம் ஆண்டு பதியேற்றார் தமிழ்நாட்டை சேர்ந்த சுந்தர் பிச்சை. சமீபத்தில் கூகுளின் 'Alphabet Inc' நிறுவனம் உலகின் மிக திறமைசாலி ஊழியர்களை மட்டும் தேர்வுசெய்து வேலைக்கு அமர்த்தியது. இதன் மூலம் இணையதள நிறுவனங்களின் 'டாப்' இடத்தை பிடித்தது அந்நிறுவனம்.
ஆனால் இதுவே அதன் தலைவர் சுந்தர் பிச்சைக்கு பிரச்சனையாக இருக்கும் என்று அவர் நினைத்து கூட பார்க்கவில்லை. வருடாவருடம் கூகுள் தன் ஊழியர்களிடம், நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்து கருத்துக்கணிப்பு நடத்துவது வழக்கம். 'Googlegeist' என்று அழைக்கப்படும் இந்த கருத்துக்கணிப்பு இந்த வருடமும் நடத்தப்பட்டு, அதின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது.
ஆய்வின் முடிவு என்ன சொல்கிறது?
கருத்துக்கணிப்பில் கேட்கப்பட்ட கூகுள் நிறுவனத்தை பற்றிய பிச்சையின் 'கனவு' ஊக்குவிக்கும் வகையில் இருக்கிறதா, என்ற கேள்விக்கு 78 சதவீதம் பேர் ஆம் என்று பதிலளித்துள்ளனர்.
ஆனால் இது கடந்த ஆண்டை விட 10 சதவீதம் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சுந்தர் பிச்சையும் அவரது நிர்வாகமும் கூகிளை அடுத்த கட்டத்துக்கு அழைத்து செல்லுமா என்ற கேள்விக்கு . 74 பேர் ஆம் சொல்லியுள்ளனர். இதுவும் கடந்த ஆண்டை விட 18 சதவீதம் குறைவு.
என்ன காரணம் ?
கணக்கெடுப்பின் முடிவுகள் பெரும்பாலும் சுந்தர் பிச்சைக்கு சாதகமாகவே இருந்தாலும், குறைந்துள்ள சதவீதம் தான் கவலை அளிக்கிறது. இதற்கு கடந்த வருடம் கூகுள் நிறுவனத்துக்கும் அதன் ஊழியர்களுக்கும் ஏற்பட்ட கடும் பூசல் தான் முக்கிய காரணம் என்று கருதப்படுகிறது.
இந்நிலையில் ஒப்பந்த ஊழியர்கள் தங்களுக்கு எந்த வித 'சலுகை'யும் அளிக்கப்படவில்லை என்று நிர்வாகத்துடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டது தொடங்கி, கடுமையான விதிமுறைகள் காரணமாக பல ஆயிர ஊழியர்கள் வெளியேறியது வரை கடந்த ஆண்டு கூகுளுக்கு கடினமான ஆண்டாகவே இருந்தது.
இந்த கணக்கெடுப்பு முடிவுகளும் அதன் விளைவாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.கடந்த ஆண்டுகளை ஒப்பிடுகையில் இந்த ஆண்டு சதவீதம் குறைந்திருப்பது நிர்வாகிகள் மத்தியில் கவலையடையச் செய்துள்ளது.