நல்ல லாபத்தை நோக்கி முதலீடு செய்பவர்களுக்கு போஸ்ட் ஆபீஸ் ரெக்கரிங் டெபாசிட் திட்டம் சிறந்த தேர்வாக உள்ளது. அவசரத்தேவைக்கு கடனும் பெற்றுக்கொள்ளலாம். கொரோனா, ஊரடங்கு என்பதால் பலருடைய மாத வருமானம் தடைப்பட்டுள்ளது. அவசர மருத்துவ செலவுக்கு பணம் தேவைப்படும்போது போஸ்ட் ஆபிஸ் ஆர்டி மீது கடன் வாங்கலாம். உடனடியாக பணம் கிடைப்பதுடன் வட்டியும் குறைவு. நிறைய போஸ்ட் ஆபிஸ் ஸ்கீம்கள் வாடிக்கையாளர்களுக்கு கடன் வழங்குகிறது.
5 ஆண்டு போஸ்ட் ஆபிஸ் ரெக்கரிங் டெபாசிட்
ஆர்டி கணக்கு இருந்தால் 12 தவணைகள் டெபாசிட் செய்யப்பட்டு ஒரு வருடம் கணக்கை தொடர்ந்த பிறகு நிலுவைக் கடனில் 50 சதவீதம் வரை கடன் பெறலாம். வாங்கிய கடனை ஒரே தொகையாக அல்லது சமமான மாத தவணைகளில் திருப்பிச் செலுத்தலாம். ஆர்.டி கணக்கிற்கு பொருந்தும் ஆர்.டி வட்டி விகிதத்துடன் கூடுதலாக கடனுக்கான வட்டி 2 சதவீதமாக பொருந்தும். திரும்பப் பெறும் தேதி முதல் திருப்பிச் செலுத்தும் தேதி வரை வட்டி கணக்கிடப்படும். கணக்கு முதிர்வடையும் வரை கடனை திருப்பிச் செலுத்தவில்லை என்றால், கடன் மற்றும் வட்டி ஆகியவை RD கணக்கின் முதிர்வு மதிப்பிலிருந்து கழிக்கப்படும்.
பொது வருங்கால வைப்பு நிதி (PPF)
தபால் நிலையத்தின் 15 ஆண்டு பொது வருங்கால வைப்பு நிதிக் கணக்கில் முதலீடு செய்திருந்தால், ஆரம்ப ஆண்டு சந்தா செலுத்தப்பட்ட நிதியாண்டின் முடிவில் இருந்து ஒரு வருடம் காலாவதியான பிறகு கடன் பெறலாம். ஒரு நிதியாண்டில் ஒருமுறை மட்டுமே கடன் பெற முடியும். முதல் கடன் திருப்பிச் செலுத்தப்படாத வரை இரண்டாவது கடன் வழங்கப்படாது. வாங்கிய கடனை 36 மாதத்திற்குள் திருப்பிச் செலுத்தினால், ஆண்டுக்கு 1 சதவீத கடன் வட்டி விகிதம் பொருந்தும். இருப்பினும், 36 மாதத்திற்குப் பிறகு கடனை திருப்பிச் செலுத்தினால், கடன் வழங்கப்படும் நாளிலிருந்து ஆண்டுக்கு 6 சதவீத வட்டி விகிதம் பொருந்தும்.
இதுபோன்ற திட்டங்களில் முதலீடு செய்வதன் மூலம் சேமிக்கவும் முடியும் அவசர தேவைக்கு குறைந்த வட்டியில் கடனும் பெற்றுக்கொள்ளலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"