ஓய்வு பெற்ற பின் மாதாந்திர தேவைகளை பூர்த்தி செய்வதற்காக தற்போதே சிறந்த திட்டங்களை தேர்ந்தெடுத்து முதலீடு செய்வது சரியானதாக இருக்கும். ஓய்வு காலத்திற்கு ஏற்ற சிறந்த திட்டம் பிரதம மந்திரி வய வந்தனா யோஜனா திட்டம்தான். 60 வயது மேற்பட்ட மூத்த குடிமக்களுக்காக இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆண்டுக்கு ரூ.1,11,000 வரை ஓய்வூதியம் பெறலாம். மற்ற ஃபிக்ஸட் டெபாசிட், பென்சன் திட்டங்களை விட இத்திட்டத்தில் நல்ல ரிட்டன் கிடைக்கிறது.
முதியவர்கள் தங்கள் வாழ்க்கையின் முக்கியமான கட்டத்தில் நிதி ரீதியாக தன்னம்பிக்கை கொள்ள வைப்பதற்காக பிரதான் மந்திரி வயா வந்தனா திட்டம் தொடங்கப்பட்டது. இதன் காலம் 2020 மார்ச் 31 வரை இருந்த நிலையில், தற்போது மார்ச் 2023 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் மூலம் யார் பயனடைவார்கள்?
60 வயதை எட்டிய தனிநபர்களுக்கான ஒரு வைப்பு நிதியாகும். இருப்பினும், வயது மூப்பு காரணமாக ஓய்வு பெற்றவர்கள், 55 வயதுக்கு பின்னர் தானாக முன்வந்து விருப்ப ஓய்வு பெற்றவர்கள் (விஆர்எஸ்) மற்றும் ராணுவத்தில் இருந்து 50 வயதுக்கு பின்னர் ஓய்வு பெற்றவர்கள் ஆகியோரும் சில நிபந்தனைகளின் அடிப்படையில் இக்கணக்கை தொடங்கலாம்.
இந்த திட்டத்தின் கீழ் அதிகபட்ச முதலீடு தொகை ரூ.15 லட்சம் ஆகும். LIC பிரதான் மந்திரி வயா வந்தனா திட்டத்தின் கீழ் ஓய்வூதிய சேவை வழங்க எல்ஐசி நிறுவனத்திற்கு மட்டுமே அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. பிரதான் மந்திரி வாய வந்தன யோஜனா திட்டத்தின் கீழ் முதலீடு செய்யும் மூத்த குடிமக்களுக்கு 10 ஆண்டுகள் வரையில் அவர்கள் தேர்ந்தெடுக்கும் காலம் அதாவது மாதா மாதம், ஒவ்வொரு காலாண்டும், ஒவ்வொரு அரையாண்டும் அல்லது ஒவ்வொரு ஆண்டும் என நான்கு கால அளவில் ஒன்றைத் தேர்வு செய்து ஓய்வூதியம் பெற முடியும்.
ஆண்டு ஓய்வூதியம் எவ்வளவு கிடைக்கும்?
இத்திட்டத்தில் பயன் பெறும் வாடிக்கையாளர் மாதாந்திர ஓய்வூதியத்திற்கு குறைந்தபட்சம் ரூ.1.62 லட்சம் முதலீடு செய்ய வேண்டும். காலாண்டு ஓய்வூதியத்திற்கு ரூ.1.61 லட்சம், ஆறு மாதங்களுக்கு ரூ.1.59 லட்சம் மற்றும் ஆண்டு ஓய்வூதியத்திற்கு குறைந்தபட்சம் ரூ. 1.56 லட்சம் முதலிடு செய்ய வேண்டும். இத்திட்டத்தின் கீழ் அதிகபட்ச மாத ஓய்வூதியம் ரூ.9,250 ஆகும். காலாண்டு ஓய்வூதியம் ரூ.27,750, அரையாண்டு ஓய்வூதியம் ரூ.55,500 மற்றும் அதிகபட்ச ஆண்டு ஓய்வூதியம் ரூ.1,11,000.
முதலீடு செய்வது எப்படி?
PMVVY திட்டம் குறித்த விரிவான தகவலுக்கு 022-67819281 அல்லது 022-67819290 என்ற எண்களை அழைக்கலாம். இது தவிர, கட்டணமில்லா எண் - 1800-227-717 என்ற எண்ணையும் அழைக்கலாம்.
சேவை வரி விலக்கு
இந்த திட்டம் ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரியில் இருந்து விலக்கு பெற்றுள்ளது. எந்தவொரு தீவிர நோய்க்கும் சிகிச்சை பெற இந்த பணத்தை நீங்கள் முன்கூட்டியே திரும்பப் பெறலாம்.
தேவையான ஆவணங்கள்
இந்த திட்டத்தில் முதலீடு செய்ய பான் கார்டு, முகவரி ஆதாரத்தின் நகல் மற்றும் வங்கி பாஸ்புக்கின் முதல் பக்க நகலை வைத்திருப்பது கட்டாயமாகும்.
கடன் வசதியும் கிடைக்கும்
இந்த திட்டத்தில் கடன் வசதியும் உள்ளது. இதில், பாலிசியின் 3 ஆண்டுகளுக்குப் பிறகு நீங்கள் கடன் பெறலாம். அதிகபட்ச கடன் தொகை கொள்முதல் விலையில் 75% ஐ விட அதிகமாக இருக்கக்கூடாது. இந்த திட்டம் அரசாங்கத்தின் பிற ஓய்வூதிய திட்டங்களைப் போல வரி சலுகைகளையும் வழங்காது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil