ஊழியர் வருங்கால வைப்பு நிதி (EPFO) அமைப்பு, அதன் உறுப்பினர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, பி.எஃப் பணம் எடுப்பதற்கான விதிகளை அரசு மாற்றியுள்ளது. இனி, இ.பி.எஃப் உறுப்பினர்கள் தங்கள் சேமிப்பில் 90% வரை வீட்டுக்கடனுக்காக பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய விதி, கணக்கு தொடங்கிய மூன்று ஆண்டுகளுக்கு பிறகு குறிப்பிட்ட வசதியைப் பெற அனுமதிக்கிறது.
முன்பு வீடு வாங்குவதற்கு பி.எஃப் பணம் எடுக்க குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் இ.பி.எஃப் உறுப்பினராக இருக்க வேண்டும். இப்போது, இந்த கால வரம்பு 3 ஆண்டுகளாக குறைக்கப்பட்டுள்ளது. இது Para 68-BD என்ற புதிய விதியின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.
இ.பி.எஃப்.ஓ உறுப்பினர்கள் தங்கள் பி.எஃப் இருப்பில் 90% வரை பணம் எடுக்கலாம். முன்பு இது 36 மாதங்களின் மொத்த பங்களிப்புடன் வட்டி அல்லது வீட்டின் விலை ஆகியவற்றில் எது குறைவோ அதைப் பொறுத்து இருந்தது. இந்த வீட்டு கடன் வசதிக்கான பணத்தை ஒரு சந்தாதாரர் தனது வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே பயன்படுத்த முடியும்.
பணத்தை எடுக்கும் நடைமுறைகளை எளிதாக்கவும், விரைவுபடுத்தவும் இ.பி.எஃப்.ஓ பல முக்கிய மாற்றங்களை அறிவித்துள்ளது. அந்த வகையில், அவசர தேவைகளுக்காக ரூ. 1 லட்சம் வரை உடனடி பணம் எடுக்க யு.பி.ஐ மற்றும் ஏ.டி.எம் வசதிகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.
தானியங்கி முறையில் கிளைம் செய்யப்படும் தொகையின் வரம்பு ரூ. 1 லட்சத்திலிருந்து ரூ. 5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் கிளைம்கள் வேகமாகச் செயல்படுகின்றன. கல்வி, திருமணம் மற்றும் மருத்துவ தேவைகளுக்கான பி.எஃப் பணம் எடுக்கும் செயல்முறைகளும் எளிதாக்கப்பட்டுள்ளன. இது ஊழியர்களுக்கு நிதிச் சுமையைக் குறைக்க உதவும்.